ஆர்.கே.நகரில் சிக்கிய அமைச்சர்கள்

chennai, minister, R.K.nagar, tamil nadu
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் சேனியம்மன் கோவில் தெருவுக்கு, தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற அமைச்சர்கள் உதயக்குமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணனை அங்கிருக்கும் மக்கள் பிடித்து வைத்த சம்பவம், பிரசாரத்துக்குச் செல்லும் மற்ற அமைச்சர்களை கிலியில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் மருது கணேஷ், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன், தீபா பேரவை சார்பில் தீபா உள்ளிட்ட பலரும் போட்டியிடுகின்றனர்.

 தமிழகத்தின், 33 அமைச்சர்களும், ஆர்.கே.நகரில் முகாமிட்டு, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக, தி.மு.க., தொடர்ந்து புகார் சொல்லி வருகிறது. தெரு தெருவாக நிறுத்தப்பட்டிருக்கும் அமைச்சர்கள், தெருவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நன் கொடை வழங்குவதாகக் கூறி வருகின்றனர்.

சர்வ சாதாரணமாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். சமீபத்தில், தொகுதிக்குள் உள்ள சேனியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனும், உதயக்குமாரும், அங்கு இருந்த, 500க்கும் அதிகமான மக்களை வரவழைத்து, உங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்க தீர்மானித்துள்ளோம். உங்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டை இணைத்து, எங்கள் பெயருக்கு, விண்ணப்ப மனு கொடுங்கள். அதை பரிசீலித்து, எல்லோருக்கும் வீடு வழங்குகிறோம். யாரும் ஓட்டுப் போடாமல் இருந்தால், அவர்கள் இந்த திட்டத்தில் இருந்து விலக்கப்படுவர் என்று சொல்லியிருக்கின்றனர்.

அதன்படி கோரிக்கை விண்ணப்ப மனுக்களோடு அமைச்சர்களை மக்கள் சந்தித்து பேசியுள்ளனர் பொதுமக்கள். அப்போது மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, வேகமாக தகவல் பரவியது. இப்படி தகவல் பரவியதும், ஒரு பக்கம் பொதுமக்களும், இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்., அணியினரும், அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். கொஞ்ச நேரத்தில், அங்கே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு, கலாட்டா நடக்க, வீடு கட்டிக் கொடுக்கக் கேட்டு, எழுதிக் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பறித்து கிழித்தெறிந்தனர்.

 அங்கே, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதும், பாதுகாப்பு போலீசாருடன், இரு அமைச்சர்களும் எஸ்கேப் ஆகி விட்டனர். இந்த விஷயத்தை கேள்விபட்ட வேட்பாளர் தினகரன், எல்லா அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் அழைத்துப் பேசியுள்ளார்; சாதுர்யம் இல்லாமல் காரியம் செய்வதாலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக வருத்தப்பட்டு, அமைச்சர்களை கடிந்து கொண்டாராம்.அடுத்தடுத்த நாட்களில், அ.தி.மு.க., அம்மா அணியினரோடு, பொதுமக்களும், மற்றக் கட்சியினரும் கடும் மல்லுக்கட்டுக்குத் தயாராகி வருவதாக, தினகரன் தரப்புக்கு தகவல் கிடைத்து, போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். களத்தில் மற்ற வேட்பாளர்களைப் போல, தினகரனும் அமைதியாக ஓட்டு சேகரித்து சென்றால் பிரச்னை இல்லை. பரிசுப் பொருட்கள் விஷயத்தில், தீவிர ஆர்வம் காடினால், தினகரனுக்கு, தொகுதிக்குள் பிரச்னை ஏற்படும் என்றும், போலீஸ் தரப்பிலேயே எச்சரிக்கை மணி அடித்துள்ளனராம். இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் நாளுக்கு நாள் டென்ஷன் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.இதனால், பிரசாரத்தில் நிதானித்துச் செல்கிறாராம் தினகரன்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top