இலங்கை கிழக்கு மாகாணத்தில் அரச வேலை கோரி இரண்டாவது வாரமாக தொடரும் போராட்டம்

government, srilanka, struggle, world
இலங்கையில் அரச துறைகளில் வேலை வழங்கக் கோரி கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் இரண்டாவது வாரமாக தொடர்கின்றது.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில்களோ அல்லது உறுதிமொழிகளோ இதுவரை கிடைக்காத நிலையில் போராட்டம் தொடர்வதாக கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது.

31.03.2011ம் ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 2013ம் ஆண்டு மத்திய அரசினால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னார் மத்திய அல்லது அரசோ மாகாண அரசோ தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என வேலையில்லா பட்டதாரிகள் கூறுகிறார்கள்.

மட்டக்களப்பு , திருகோணமலை மற்றும் காரைதீவு (அம்பாரை) ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை மத்திய அமைச்சர்கள் , மாகாண அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

அவர்களால், பட்டதாரிகளுக்கு ஆதரவும் ஆறுதலும் தான் கிடைத்ததே தவிர கோரிக்கைகள் தொடர்பான உறுதிமொழியையோ உத்தரவாதத்தையோ பெற முடியவில்லை என்று பட்டதாரிகள் கூறுகிறார்கள்.

இரவும் பகலும் தொடர்ச்சியாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் பிரேத பெட்டி பேரணி , மனித சங்கிலி மற்றும் மாவட்ட செயலகங்கள் முன்பாக ஆர்பாட்டம் என பல்வேறு வடிவங்களில் கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 7500 பட்டதாரிகள் 4 வருடங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாக வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது

மத்திய மற்றும் மாகாண அரச துறைகளில் போட்டிப் பரீட்சை இன்றி தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதான கோரிக்கையாக இந்த சத்தியாகிரக போராட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கான வயது எல்லை 36 ஆகும். வயது எல்லை 45 என அதிகரிக்கப்பட வேண்டும், ஏற்கனவே அரச துறைகளில் தொழில் புரிபவர்கள் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளின் போது உள் வாங்கப்படக் கூடாது, பட்டதாரி சான்றிதழ் பெற்ற திகதியை கருத்தில் கொண்டு மூப்பு அடிப்படையில் தொழில் வாய்ப்பு கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்,மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண மாகாண சேவையில் 4700 ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட பல்வேறு துறைகளில் 5200 வெற்றிடங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் மொழி மூலம் – 2727 , சிங்கள மொழி மூலம் – 1371 என்ற எண்ணிக்கையில் காலியாகவுள்ள ஆசிரியர் பதவிகளுக்கு குறித்த பட்டதாரிகளை நியமிப்பது குறித்து கிழக்கு மாகாண சபை கவனம் செலுத்தினாலும் இதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசு தான் வழங்க வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஏற்கனவே பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவர்த்தையின் போது இந்த விடயம் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது

கொழும்பில் பிரதமரின் உத்தரவின் பேரில் தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் இது தொடர்பாக சிறப்பு கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மாகாண ஆளுநர் , முதலமைச்சர் , கல்வி அமைச்சர் , முதன்மை செயலாளர் மற்றும் கல்விச் செயலாளர் உட்பட உரிய துறை அதிகாரிகளும் இக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top