நாகாலாந்தில் 'கூவத்தூர் பாணி'யில் 40 எம்.எல்.ஏ.,க்கள் சிறைபிடிப்பு
kohima, kuvattur, MLA, tamil nadu February 20, 2017,
கோஹிமா: தமிழகத்தின் கூவத்துார் பாணியில், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்திலும், எம்.எல்.ஏ.,க்கள், ஆடம்பர விடுதியில் சிறை பிடிக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர், டி.ஆர். ஜெலியாங் தலைமையிலான நாகாலாந்து மக்கள் முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பிறப்பித்த உத்தரவுக்கு, பழங்குடியினர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன.
முதல்வர் பதவியில் இருந்து ஜெலியாங் விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, பதவி விலக, ஜெலியாங் முன்வந்தார். நாகாலாந்தில் ஆளும், நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க, கடும் போட்டி நிலவி வருகிறது.
சட்டசபையில் மொத்தம் உள்ள, 60 தொகுதிகளில், 48 எம்.எல்.ஏ.,க்களை உடைய நாகாலாந்து மக்கள் முன்னணி, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ள பா.ஜ., மற்றும் எட்டு சுயேச்சைகள், கூட்டணியில் உள்ளன.
நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் ஷுர்ஹோசிலி லேஜேட்சுவை முதல்வராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அவருக்கு, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து வந்தனர்.
இதனிடையில், முன்னாள் முதல்வரான நீபியூ ரியோவும், முதல்வர் போட்டியில் களமிறங்கினார். அவருக்கு, 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, யார் அடுத்த முதல்வர் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.இதனிடையில், ரியோவுக்கு ஆதரவு அளிக்கும், 40 எம்.எல்.ஏ.,க்கள், அசாம் மாநிலம் காஜிரங்காவில் உள்ள ஒரு ஆடம்பர விடுதிக்கு நேற்று காலை அழைத்து செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
டில்லி சென்றுள்ள முதல்வர் ஜெலியாங் உள்ளிட்ட தலைவர்களும், கவர்னர் ஆச்சாரியாவும் நாளை (பிப்.,20) அல்லது நாளை மறுநாள், நாகாலாந்து திரும்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, இந்த, எம்.எல்.ஏ.,க்கள், ஆடம்பர விடுதியிலேயே இருப்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதல்வர் ஜெலியாங் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் இன்று (பிப்.,19) அளித்தார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், சென்னைக்கு அருகேயுள்ள கூவத்துார் ஆடம்பர விடுதியில் சிறை வைக்கப்பட்ட சம்பவத்தை போலவே, நாகாலாந்திலும், எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.