விரைவில் ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா? ஆபத்தை உணராத தமிழக அரசு!
Uncategorized February 3, 2017, 
தமிழக கிராமங்களின் உயிர்நாடியாக விளங்கும் ரேஷன் கடைகளுக்கு விரைவில் மத்திய அரசு மூடுவிழா நடத்த உள்ளது என்றும் அதனால் உண்டாகக் காத்திருக்கும் நேரடி ஆபத்தைத் தமிழக அரசு இன்னமும் உணரவில்லை என்றும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 33,973 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 1.98 கோடி குடும்ப அட்டை தாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.இலவச அரிசி,கெரசின்,சர்க்கரை,கோதுமை மற்றும் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்கள் தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் இந்த ரேஷன் கடைகள் அரசுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துவதாகக் கூறி அரிசி, கெரசின், சர்க்கரை மானியங்களை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வந்தது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது முழுமையான ரேஷன் கடைகளின் மூடுவிழாவுக்கு வழிவகுக்கும் திட்டம் என்கிறார்கள் குடும்ப அட்டை பயன்பாட்டாளர்கள்.
.
இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில்,"மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள அரிசி, கடந்த நவம்பர் மாதம் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் அரிசி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. நேற்றைய பட்ஜெட்டில் வெறும் ரூ.200 கோடியை மட்டும்தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தேவையான தொகை ரூ.2,700 கோடியாகும். ஆகையால் மத்திய அரசிடம் அரிசி வழங்க நிதியில்லை என்பது தெளிவாகிறது.
தமிழகத்தின் ரேஷன் கடைகளிலும் 100% அரிசி வழங்கி வந்த நிலையில் அதனை 80% ஆக குறைத்துவிட்டனர். இது இந்த மாதம் இன்னமும் 20%க்கு மேலே குறையும் என்ற நிலைதான் உள்ளது. எனவே வரும் நாட்களில் மிகக் கடுமையான அரிசி தட்டுப்பாடு தமிழக மக்கள் மத்தியில் ஏற்படவுள்ளது. ஆனால் இதையெல்லாம் பற்றிக் கவலை கொள்ளாத தமிழக முதல்வர் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல், பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் சென்ற பொங்கலுக்கு பச்சரிசி, கரும்பு, முந்திரி கொடுக்கிறோம் என்று கூறி புழுங்கல் அரிசியை விநியோகம் செய்யவில்லை. ஜனவரியில் 5 நாட்களில் மட்டுமே மொத்த விற்பனையை நடத்தி முடித்துவிட்டனர். மேலும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உளுந்து, துவரை, பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. இப்போது பிப்ரவரியும் வந்துவிட்டது. ஆனால் ஒதுக்கீடு எதுவும் இல்லை. ரேஷன் கடைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அரிசியும் சர்க்கரையும் இல்லாமல் போனால் ரேஷன் கடை எதுக்கு என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது." என்றார் கொந்தளிப்பாக.

மேலும் தொடர்ந்த அவர், "ரேஷன் அட்டைகளில் திருத்தும், உள்தாள் ஒட்டுதல் என்று மட்டும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகளை அதிகாரிகள் நிகழ்த்திவிடுவதால் மண்டல அலுவலகங்களில் தினமும் பொதுமக்கள், திருத்தம் மேற்கொள்ள அலைமோதுகின்றனர். ஆங்காங்கே ரேஷன் அரிசிக் கடத்தலும் நடக்கிறது. அது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் நடக்கின்றன. ஆனால் கடத்தலுக்கு மட்டும் முடிவில்லை. இந்த நிலையில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்க பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதுவும் இன்னும் முடியவில்லை." என்றார் ஆதங்கத்தோடு.
– சி.தேவராஜன்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.