'முதல்வருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு!' என்ன பின்னணி?

'முதல்வருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு!' என்ன பின்னணி?

Uncategorized

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் சந்தித்து தொகுதியில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார். 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா உயிரோடு இருந்தக்காலக்கட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மாற்றுக்கட்சியினரிடம் பேசத் தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளது. எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசுகிறார். சட்டசபையிலும் இருவரும் மரியாதையாக நடந்து கொள்கின்றனர். இந்த ஆரோக்கியமான அரசியலை அனைத்து தரப்பினரும் வரவேற்று வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் நலப்பணிகளிலும் இவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்நிலையில் நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்தார். 10 நிமிட சந்திப்பில் தொகுதி பிரச்னைகள் தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். 
இதுகுறித்து எச்.வசந்தகுமாரிடம் கேட்டோம். 

 "நாங்குநேரி தொகுதியில் பல்வேறு குறைகள் உள்ளன. அதுதொடர்பாக சட்டசபையிலும் பேசியுள்ளேன். முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டு இருந்தேன். நேற்று அனுமதி கிடைத்தவுடன்   பாலங்கள், குடிநீர், சாலை, பஸ் வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து பேசினேன். மொத்தம்  70 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். 
தொகுதி நிதி 2 கோடி ரூபாய், என்னுடைய சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாய் என ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை வளர்ச்சிப்பணிகளுக்காக செலவு செய்கிறேன். சொந்த செலவில் தொகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்துக்கு கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 5 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையில் பணிகளுக்கு ஒரு சதுர அடிக்கு 2000 ரூபாய் வரை திட்ட மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் யூனியன் சார்பில் நடக்கும் பணிகளுக்கு  1200 ரூபாய் முதல் 1300 வரை மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த வேறுபாடு காரணமாக பொதுப்பணித்துறை மூலம் நடக்கும் பணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த மதிப்பீடு வேறுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் மதிப்பீடு வேறுபாடு காரணமாக நான் பேசிய போது, அதற்கு பதிலளித்த அமைச்சர், 'மதிப்பீடு தொகையை கமிட்டியே நிர்ணயிக்கிறது' என்று தெரிவித்தார்" என்றார்.

உங்கள் சந்திப்பில் அரசியல் தொடர்பாக பேசினீர்களா என்று வசந்தகுமாரிடம் கேட்டதற்கு, "தொகுதியில் உள்ள பிரச்னைகளுக்காகத்தான் முதல்வரை சந்தித்தேன். அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை"என்றார். 
நான் தெரிவித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'எல்லா பாரத்தையும் என் மீது இறக்கி வைத்து விட்டீர்கள்' என்று சிரித்துக் கொண்டே நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். 

– எஸ்.மகேஷ் 

 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top