‘நாயுடு கொடுத்தார்; பினராயி கொடுப்பாரா?!’ -ஓ.பன்னீர்செல்வம் முன்நிற்கும் நதிநீர் சவால்
Uncategorized February 3, 2017,
கோடை காலத்தில் தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை சமாளிக்க முடியுமா என்ற அச்சம், அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது. ' நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, கேரளாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் தமிழக அதிகாரிகள் பெயரளவுக்குக் கலந்து கொண்டனர். எப்போதும்போல பேச்சுவார்த்தை கண்துடைப்பாகவே முடிந்துவிட்டது' எனக் கொந்தளிக்கின்றனர் கொங்கு மண்டல மக்கள்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும் அங்கிருந்து தமிழகத்துக்கும் வருகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து, இரண்டு மாநிலங்களின் குடிநீர்த் தேவைக்கு நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. " தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் சோகம் ஒருபுறம் இருந்தாலும், கொங்கு மண்டலத்தின் நீராதாரமான பரம்பிகுளம், ஆழியாறு, பவானிசாகர், சோலையாறு அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாக உள்ளது. இதனால், வரக் கூடிய காலகட்டங்களில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
' பில்லூர் நீர் வழங்குதல் திட்டத்தின் மூலமும் ஆழியாறு மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து 45 மில்லியன் லிட்டர் நீர் திறந்து விடப்பட்டால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்துக்கான நீர் தேவையை சமாளிக்க முடியும்' என்கின்றனர் அதிகாரிகள். அதேபோல், பரம்பிகுளம் ஆழியாறு நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் மூலம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. சித்ரபுழா நீர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 7.25 கன அடி நீரை கேரளம் பெறுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளாவின் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக சோலையாறு அணையின் மூலம் மணக்கடவு தடுப்பணையில் இருந்து அந்த மாநிலத்துக்கு 100 கன அடி தண்ணீர் தரப்படுகிறது. 'இவற்றை 200 கன அடியாக உயர்த்தி தர வேண்டும்' என்று கேரள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை” என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
" கேரளாவில் உள்ள நதிநீர் ஆதாரங்களின் மூலம், தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக திருவனந்தபுரத்தில் இரண்டு மாநில அதிகாரிகளும் பங்கேற்ற பேச்சுவார்த்தை கண்துடைப்பாகவே முடிந்துவிட்டது" என ஆதங்கத்தோடு பேசினார் தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். தொடர்ந்து நம்மிடம் பேசினார். " கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாறு கால்வாய் கேரள அரசால் மூடப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு, உள்ளாறு, செண்பக தோப்பு அணை உடைப்பு பிரச்னை, ஶ்ரீவில்லிப்புத்தூர் அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு பிரச்னை, கொங்குமண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பவானி, சோழையாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், அமராவதி பிரச்னை, பாண்டியாறு -புன்னம்புழா ஆகிய நதிகளை பற்றி 34 ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் இதன் பிரச்னைகளை எல்லாம் குறிப்பிட்டு இருந்தேன்.
தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள சித்திரபுழா திட்டத்துக்குத் தண்ணீர் வழங்கப்படுகிறது. சோழையாறு அணையின் மணக்கடவு தடுப்பணை மூலம் 7.25 கன அடி தண்ணீரை கேரளாவுக்கு தமிழகம் எந்த தொய்வில்லாமல் வழங்குகிறது. தமிழகத்தில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் என அனைத்து தேவைகளையும் கேரள மக்களுக்கு அனுப்பி வருகிறோம். ஆனால் தமிழக நதிகளின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டும் கேரள அரசு பிடிவாதம் காட்டுகிறது. நம்முடைய பெருந்தன்மையை கேரளா புரிந்து கொண்டு செய்கின்றதா? புரியாமல் செய்கின்றதா என்று தெரியவில்லை. நதிநீர் பிரச்சினைகள் குறித்து கேரள அரசிடம் பல சுற்று பேச்சுவார்த்தையை தமிழக அரசு நடத்தி விட்டது. எந்த முடிவும் இதுவரையில் எட்டப்படவில்லை.
கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சிதான். மீதமுள்ள நீரை தமிழகத்துக்கு கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெரும். இதனால் கேரளத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கேரளாவில் எண்பத்தைந்துக்கும் மேற்பட்ட நதிகள் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. இந்த நதிகள் மூலம் 1.98 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் பாய்கிறது. மேற்கு நோக்கி பாயும் நதிகளை தமிழகத்துக்குத் திருப்புவது பற்றி 1976-ம் ஆண்டு மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து, இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்தது. ' இந்த நதிகளை தமிழகத்துக்குத் திருப்புவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன' என அக்குழு கூறியது. அதன்பின்பு மத்திய, தமிழக, கேரள அரசுகள் பல முறை இது பற்றி பேசியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை .நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் இப்பிரச்னை பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு, பாரதபுழா, சாலக்குடி, பெரியாறு, ஆழியாறு நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ளன . இந்த நதிகள் கேரள மாநிலத்தில் பாலக்காடு, மல்லாபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று வளம் சேர்க்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்னைகள் அனைத்தும் தீர்வு காண முடியாமல் தொடர்கின்றன. குமரி மாவட்டம் நெய்யாறிலிருந்து நீலகிரி, தொட்டபெட்டா வரை உள்ள நதிநீர் பிரச்னைகளை அவசரமாகப் பேசித் தீர்க்க வேண்டும்" என்றவர்,
“ கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேல், இரு மாநில அரசுகளும் இதுவரை கூடிப் பேசியுள்ளன. 28-ம் தேதி நடந்த கூட்டத்தில், ‘ பரம்பிக்குளம்-ஆழியாரில் இருந்து கூடுதல் தண்ணீரை கேரளத்துக்குக் கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை தமிழக அரசு செவிசாய்த்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நமக்குத் தேவையான ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. நீண்டகாலமாக இருக்கும் பிரச்னைகளை, தமிழக அதிகாரிகள் பேசாமல் தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு என்ன தெரியப் போகிறது என, ஏதோ பெயரளவுக்குச் சென்று வந்துள்ளனர் நமது அதிகாரிகள். ஒப்பந்தப்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீரில் நாம் கட்ட வேண்டிய தடுப்பணைகளையும் கட்டாமல், கேரளாவும் தமிழகத்துக்கு நீர்வரத்து வரும் ஆறுகளில் அணைகளைக் கட்டி விட்டது. இதைப் பற்றிக்கூட இருமாநில அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசவில்லை என்பதுதான் மிகுந்த வேதனையைத் தருகிறது” என்றார் ஆதங்கத்துடன்.
தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 2.5 டி.எம்.சி தண்ணீரை மனமுவந்து கொடுத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதே பெருந்தன்மை கேரள அரசுக்கும் இருக்குமா எனக் கேள்வி எழுப்புகின்றனர் சூழல் ஆய்வாளர்கள்.
– ஆ.விஜயானந்த்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.