மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் காட்டம்!
Uncategorized February 3, 2017,
இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசின் பாராமுகம், பட்ஜெட்டில் சர்க்கரை மானியத்தை ரத்து செய்யும் அறிவிப்பு ஆகியவற்றைப் பற்றி பேசினார்.
அவர், 'தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாகவும், பயிரிட்ட நெற்பயிர்கள் கருகிய காரணத்தினாலும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடியும், வர்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்காக ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடியும் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளின் அடிப்படையில் கேட்ட மொத்த தொகை ரூபாய் 88 ஆயிரத்து 50 கோடி. ஆனால் அடிக்கடி மனம் திறந்து பேசுகிறேன் என்று வானொலியில் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியது வெறும் ரூபாய் 1940 கோடி. தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது.' என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும், 'வரும் நிதியாண்டில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிற சர்க்கரைக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சர்க்கரையை சந்தை விலைக்கு வாங்கி, பொது விநியோக திட்டத்தின் மூலம் ஒரு கிலோ சர்க்கரையை ரூபாய் 13.50-க்கு விற்கிறது. இதற்காக கடந்த கால மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலங்களுக்கு மானியமாக ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூபாய் 18.50 அளித்து வந்தது. இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 27 லட்சம் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 40 கோடி குடும்பத்தினர் பயனடைந்து வந்தனர். மத்திய அரசு இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூபாய் 4,500 கோடி நிதி ஒதுக்கியது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் மானியங்களை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே மண்ணெண்ணெய் மானியத்தை ஒழிக்கிற வகையில் மாதத்துக்கு 10 பைசா விலையை உயர்த்திக் கொண்டு வருகிறது. தற்போது உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை ரத்து செய்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொது விநியோகத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமைக்கு பதிலாக மானியமாக ரூபாயை நேரடி பயன்கள் மாற்று திட்டத்தின்கீழ் வழங்குவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதன் முதற்கட்டமே சர்க்கரை மானியம் ரத்து. இத்தகைய மக்கள் விரோத போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.' என்று பட்ஜெட்டில் சர்க்கரை மானியம் ரத்து செய்யும் அறிவிப்புக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்தார் திருநாவுக்கரசர்.
படம்: ப.சரவணகுமார்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.