அ.தி.மு.க.வில் இவர்களுக்கெல்லாம் பதவி கொடுத்தது ஏன் தெரியுமா? சசிகலாவின் புது ஃபிளான்! #VikatanExclusive
Uncategorized February 3, 2017,
அ.தி.மு.க.வில் அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்தவே ஒரே அறிவிப்பில் 23 பேருக்கு பதவிகளை வழங்கி உள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா.
ஜெயலலிதாவால் ஓரங்கப்பட்ட அ.தி.மு.க.வினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அ.தி.மு.க.வின் தலைமை கழகத்திலிருந்து வந்த அறிவிப்பால் சிலர் மகிழ்ச்சியடைந்தாலும் பலர் விரக்தியடைந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா, பதவியேற்றப் பிறகு கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. இந்த அறிவிப்புக்கு பின்னால் சசிகலாவின் புதுஃபிளான் இருப்பதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஒவ்வொரு முடிவுகளையும் தீவிர ஆலோசனைக்குப் பிறகே எடுத்து வருகிறார். கட்சியில் எந்தவித பிளவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் அதிக கவனமாக இருக்கிறார். ஏற்கனவே, சசிகலாவின் தலைமையை விரும்பாத அதிருப்தி அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு கொடிப்பிடித்து வருகின்றனர். அவர்கள் மீது கூட சசிகலா நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். தீபாவின் வீட்டிற்கு செல்லும் கூட்டம், அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் சசிகலா தரப்பு கவனமாக செயல்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகிகள், "திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளை அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ வகித்து வந்தார். அவரிடமிருந்த எம்.ஜி.ஆர். இளைஞரணி பதவி முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல முன்னாள் கவுன்சிலர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி வகித்து வந்த மீனவர் பிரிவு செயலாளர் பதவி அமைச்சர் ஜெயக்குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீது வைத்துள்ள நம்பிக்கையே எம்.சி. முனுசாமிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தது. ஆனாலும் அவர் வேளச்சேரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு அவருக்கு மீனவர் பிரிவு பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் டம்மியாக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. அதை செங்கோட்டையன் மறுத்தார். தற்போது அவருக்கு கழக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல சைதை துரைசாமி, தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக தகவல் பரவியது. அவருக்கும் கழக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ, பி.எம். நரசிம்மன் கட்சியின் சீனியர். அவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவருக்கும் கழக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்த கருப்பசாமிபாண்டியன், தி.மு.க.வில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கும் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடமிருந்த பதவிகள் பறிக்கப்பட்டன. கட்சியில் ஓரங்கப்பட்ட அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயபால், குப்பன் ஆகியோருக்கு மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 23 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பதவி பெற்றவர்கள் எல்லாம் கட்சியிலிருந்து அணி தாவி விடலாம் என்ற அச்சத்திலேயே கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இந்த பதவிகள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு பெயருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் நிர்வாகிகளுக்கும் விரைவில் நல்ல செய்தியை சசிகலா தெரிவிக்க உள்ளார். ஜெயலலிதாவைப் போல அதிரடி அறிவிப்புகள் இனி அ.தி.மு.க.வில் இருக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றே சசிகலாவும், அவர்களது தரப்பும் விரும்புகிறது. அதோடு புதிய பதவி பெற்றவர்களில் பலர் மன்னார்குடி கும்பலால் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது பதவி பறிக்கப்பட்டவர்கள் என்பதும் உண்மை" என்றனர்.
பதவி பெற்றவர்களின் ஆதரவாளர்கள், "எங்கள் அண்ணன் இதைவிட நல்லப் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் கட்சித் தலைமை டம்மியாக ஒரு பதவியை கொடுத்துள்ளது. அண்ணனுக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் எங்களின் முடிவு வேறுவிதமாக இருக்கும்" என்று இப்போதே அவர்கள் சொல்லத் தொடங்கி விட்டனர். இந்த தகவலும் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில் புதிய நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
– எஸ்.மகேஷ்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.