பெட்ரோலுக்கு மானியம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

federal government, India, New delhi, petrol
புதுடில்லி: ‘பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறை, மீண்டும் வராது’ என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

விலை உயர்வு:

சர்வதேச சந்தை நிலவரப்படி, பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையை, மாதம் இரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்க, மத்திய அரசு அனுமதித்துள்ளது. சமீப காலமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, ஏறுமுகமாக உள்ளது. இதனால், டிசம்பருக்கு பின், அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்தது. இந்த விலை உயர்வுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மானியம் இல்லை:

இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடு, 2010 ஜூனிலும், டீசல் விலை மீதான கட்டுப்பாடு, 2014 அக்டோபரிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, இவற்றின் விலையை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன; இந்த நிலை தொடரும். எண்ணெய் பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கும் நடைமுறை, மீண்டும் வராது.

ஏழைகள் விரோத செயல்:

இருப்பினும், பெட்ரோலிய பொருட்களின் விலை, தாங்க முடியாத நிலைக்கு சென்றால், அவற்றின் மீதான கலால் வரியை, மத்திய அரசு குறைக்கும். மானியங்கள் வழங்குவது, ஏழைகள் விரோத செயல். தேவையானோருக்கு மட்டுமே, மானியங்கள் வழங்கப்பட வேண்டும். விலை ஏற்றத்தை தாங்கக் கூடியோருக்கு, மானியங்கள் வழங்கப்படக் கூடாது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் வெகுவாக குறைந்த சமயம், அதன் பலனில், 50 சதவீதத்தை நுகர்வோருக்கு மத்திய அரசு வழங்கியது. மீதமுள்ள, 50 சதவீத பயன், கலால் வரியாக வசூலிக்கப்பட்டது. இந்த கூடுதல் நிதி, உள்கட்டமைப்பு, சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

English summary:

NEW DELHI: ‘Petrol, diesel subsidy procedure for goods not come back, “the federal government has said categorically.

Source: பெட்ரோலுக்கு மானியம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top