வேளாண் தொழில்நுட்பத்திற்கு நெல்லை பல்கலை அனுப்புகிறது சாட்டிலைட்
agriculture technology, nellai, nellai university, satellite, tamil nadu, tirunelveli March 24, 2017,
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை அறிய 7.67 கோடி ரூபாய் செலவில் விண்ணில் சாட்டிலைட் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளப்போவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கட்டுமானங்கள் குறித்து துணைவேந்தர் கி.பாஸ்கர் கூறியதாவது:நெல்லை பல்கலையில் தற்போது சுற்றுச்சுவர் இல்லை. 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். பல்கலை வளாகத்தில் செயல்படும் “ஞானவாணி’ மாணவர் வானொலிக்கு ரூ 75 லட்சம் செலவில் புதிய ஒலிபரப்பு கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. மேலும்3 ஆயிரம் மாணவர் அமரும் வகையில் 14 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு அரங்கம் கட்ட உள்ளோம்.
பல்கலையில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சூரிய சக்தியை கொண்டு சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 13.50 கோடி ரூபாய் செலவில் துவக்க உள்ளோம். இதன் மூலம் 3 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் பல்கலையின் தேவையான ஒரு மெகாவாட்டை தவிர மீதத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்வோம். பல்கலை வளாகத்தில் 200 கோடி ரூபாய் செலவில் மையப்படுத்தப்பட்ட கருவி மயமாக்கல் வசதியும், 100 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு கிராமமும் ஏற்படுத்த உள்ளோம். நெல்லை பல்கலை மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கில் 7.67 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மனோசாட் என்ற ஒரு சேட்டிலைட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதன் மூலம் தமிழக விவசசாயிகள் பயன்படும் வகையில் வேளாண்துறையில் நோய்த்தடுப்பு முறைகள், புதிய நுட்பங்கள், காலமுறைக்கு ஏற்பட்ட விவசாயம் போன்றவற்றை கண்டறிவோம் என்றார். பேட்டியின் போது பல்கலை பதிவாளர் ஜான் டி பிரிட்டோ உடன் இருந்தார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.