ஏர் இந்திய ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,
air india, India, mp, mumbai, shiva sena March 24, 2017,
மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி., ஊழியரை செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மானாபாத் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் ரவிந்திர கெயிக்வாட். இவர், இன்று புனேயிலிருந்து டில்லி செல்லும் விமானத்தில் சென்றார். அப்போது இருக்கை பிரச்னை காரணமாக ஏர் இந்தியா ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஊழியரை செருப்பால் அடித்ததாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆணவம்:
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கெய்க்வாட், ஊழியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதால் செருப்பால் அடித்தேன். 25 முறை அடித்தேன். நான், சிவசேனா எம்.பி., பா.ஜ.,வை சேர்ந்தவன் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
அவமானப்படுத்தினார்:
அடி வாங்கிய சுகுமார் என்ற ஊழியர் கூறியதாவது: என்னை செருப்பால் அடித்த எம்.பி., மோசமான வார்த்தைகளால் திட்டினார். எனது கண்ணாடியை உடைத்ததுடன், அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் அவமானப்படுத்தினார். எம்.பி.,க்களின் இந்த கலாசாரம், நடவடிக்கைகளில் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் அசோக் கஜபதி கூறுகையில், இது போன்ற சம்பவங்களை எந்த கட்சியும் ஆதரிக்கக்கூடாது. இது போல் சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
வக்காலத்து:
சிவசேனா எம்.பி., மணிஷ் கயன்டே கூறுகையில், சம்பவத்தை கெயிக்வாட் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், இது போன்ற நடவடிக்கைக்கு சிவசேனா எப்போதும் ஆதரவு தராது. கெயிக்வாட் புகழ்பெற்ற எம்.பி., அவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.