கடின உழைப்புக்கு சக்தி அதிகம்: ஜி.டி.பி., வளர்ச்சி குறித்து மோடி பெருமிதம்

India, narendra modi, new banknotes, New delhi
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ”ஹார்வர்டை விட கடின உழைப்புக்கு (ஹார்டு வொர்க்) சக்தி அதிகம்” என தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு வாபஸ்:

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மேற்கொண்டார். பிரதமரின் அதிரடி நடவடிக்கை நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாகின.

பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்:

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை வேரறுத்துவிடும் என விமர்சித்திருந்தார். மேலும், இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தற்காலிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஜி.டி.பி., வளர்ச்சியில் பாதிப்பில்லை:

ஆனால் அதற்கு நேர்மாறான முடிவுகள் தற்போது வரத் துவங்கி உள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு நாட்டின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி)வளர்ச்சி எதிர்பார்த்ததை விட 7.1 சதவீத அளவை எட்டியிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது சீனாவின் 6.8 பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாகும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்தபோதிலும், பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஞ் நகரில் இன்று (மார்ச் – 1) நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடின உழைப்புக்கு சக்தி அதிகம்:

ஒருபுறம் ஹார்வர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் என்ன சொன்னார்கள் (ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை தொடர்பான விமர்சனங்கள்) என்பதை பற்றி ஒரு தரப்பினர் விவாதித்து கொண்டிருந்த வேளையில், மற்றொரு புறம் ஏழை தாயின் மகன் பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது என தனது கடின உழைப்பால் இயங்கிக் கொண்டிருந்தார். உண்மையை சொல்லப் போனால் கடின உழைப்பு தான் (ஹார்டு வொர்க்) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை விட சக்தி வாய்ந்தது. அதன் காரணமாகவே நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை.

பா.ஜ., வெற்றி உறுதி:

உத்தரப் பிரதேசத்தின் முதல் 5 கட்ட தேர்தல்களில் பா.ஜ.,வின் வெற்றியை வாக்காளர்கள் உறுதி செய்துவிட்டனர். எஞ்சிய கட்டத் தேர்தல்களில் விழும் வாக்குகள் அனைத்துமே உபரியானவை. அன்பளிப்பு மற்றும் ஊக்கத் தொகை போன்றது. எனவே பா.ஜ.,வுக்கு ஊக்கத் தொகை வழங்க வாக்காளர்கள் முன் வரவேண்டும். காய்கறிகள் வாங்கி முடித்த பின், கடைக்காரர் அன்பளிப்பாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தருவது போல, எஞ்சிய இரு கட்டத் தேர்தல்களிலும் பா.ஜ.,வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top