10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
India, new coins, New delhi, Reserve bank of india January 7, 2017,
புதுடில்லி : ‘பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வரும் தகவல்கள் தவறானவை; மக்கள் அச்சமடைய வேண்டாம்; அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை’ என, ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.
தவறான தகவல்:
செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. செல்லாத நோட்டுகளை மாற்ற வாய்ப்பு தரப்பட்ட போது, புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, நாணயங்களையும் மக்கள் வாங்கி சென்றனர். இவ்வாறு, 10 ரூபாய் நாணயங்கள் பெற்றவர்களும், ஏற்கனவே அவற்றை சேர்த்து வைத்திருந்தோரும், தற்போது, செலவு செய்ய முடியாமல் போய் விடுமோ என, அச்சமடைந்து உள்ளனர்.
’10 ரூபாய் நாணயங்கள் செல்லாது’ என, தவறான தகவல்கள் பரவி வருவதே இதற்குக் காரணம். இதை உண்மை என நம்பி, வியாபாரிகளும் வாங்க மறுப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
செல்லும்:
இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: பத்து ரூபாய் நாணயங்கள், 2009ல் அறிமுகம் ஆனது. அவ்வப்போது, சில மாற்றங்களுடன், அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவரை, போலி நாணயங்கள் எதையும் கண்டறியவில்லை.
இந்த நாணயங்கள், இரு உலோகத்தால், வட்ட வடிவில் உருவாக்கப்பட்டவை; 27 மி.மீ., விட்டம், 7.71 கிராம் எடை உடையவை. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று, ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அவை அனைத்தும் செல்லும்; பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Source: 10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.