எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து
Uncategorized March 26, 2025,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி பயணம் செய்த நிலையில் அங்கு, அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக எந்த உரையாடலும் ஏற்படவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்: அவர் கூறியதாவது:
“தமது பயண நோக்கம் அலுவலக பார்வை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, எப்படி பின்னர் அமித் ஷாவை சந்திக்க நேரிட்டது? உள்துறை அமைச்சரை இவ்வாறு ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? வெளிப்படையாக சந்திக்கலாமே! இன்று ஒரு காரணம் சொல்கிறார்கள், நாளை இன்னொரு காரணம் கூறுகிறார்கள். நேற்று கட்டிட திறப்பு என்று சொன்னவர், இன்று தமிழ்நாடு பிரச்சினை பற்றி பேசினோம் என்கிறார்.
இதெல்லாம் ஒரு நிச்சயதார்த்தம் போல! கல்யாண தேதி மட்டும் இன்னும் சொல்லவில்லை! கூட்டணி இல்லை, உறவு இல்லை என ஏற்கெனவே உறுதிமொழி எடுத்தவர்கள், மணிக்கணக்கில் பேசினால் என்ன பேசினார்கள் என்பது புரியாத விசயமா? தமிழ்நாட்டின் விவகாரம் என்று சொன்னால், உடனடியாக அனுமதி கிடைத்திருக்காது. எடப்பாடி பழனிசாமி எந்த காரணத்தால் அமித் ஷாவை சந்திக்கத் தள்ளப்பட்டார்? என்ன அழுத்தம் உள்ளது?”
இந்த விவகாரம் தொடர்பான இன்னும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என அவர் கூறினார்.
Edited by Mahendran
….
Source: Webduniya
Read More >> எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து