“ அவர் அமைச்சர் மகன் இல்லை”- காவல்துறை விளக்கம்
tami nadu June 27, 2019,
நீலாங்கரை பகுதியில் காவலர்களிடம் தகராறு செய்தவர் அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது
சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, சாலையோர கடை, ஆட்டோ ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதி பின்னர் இறுதியாக ஒரு சுவரில் மோதி நின்றது. இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் காரில் இருந்த நபரை விசாரிக்க முற்பட்டபோது, அவர் மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. காரிலிருந்து வெளியே வந்த அவர், காவல்துறையினரை வாய்க்கு வந்தபடி ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார். அவர்களைத் தாக்கவும் முற்பட்டார்.
போதையிலிருந்தவரின் ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்தபோது, அவர் திருவான்மியூரில் தங்கியுள்ள நவீன் என்பது தெரியவந்தது. இவர் சொந்தமாக பழங்களை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து அவரை கைது செய்த நீலங்கரை காவல் துறையினர், 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமில்லாமல் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதையும் படிக்க…
இதனிடையே போலீசாரிடம் தகராறு செய்தது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என சமூக வலைத்தளங்களில் போலி செய்தி வேகமாக பரவியது. இதனையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் போலீசாரிடம் தகராறு செய்தது தனது மகன் இல்லை என்றும் தனக்கு எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒருவரை தன் மகன் எனக் கூறி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் காவலர்களிடம் தகராறு செய்தவர் அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், குடிபோதையில் காவலர்களிடம் தகராறு செய்தது அமைச்சரின் மகன் என தவறான செய்தி பரவி வருவதாகவும், அவ்வாறு தகராறு செய்தது திருவான்மியூரைச் சேர்ந்த நவீன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்கி, காவலரிடம் தகராறு செய்த நவீன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காவல்துறை, நவீனுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> “ அவர் அமைச்சர் மகன் இல்லை”- காவல்துறை விளக்கம்