ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததால் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவு
tami nadu June 21, 2019,
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததால் அந்த பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குயின்ஸ்லாண்ட் (Queensland) எனும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.இந்த பூங்காவிற்கு தினந்தோறும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளது.

இந்நிலையில் இந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள "ப்ரீ பால் டவர்" (FREE FALL) எனும் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இந்த சூழலில் ராட்டினம் அறுந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் "ப்ரீ பால் டவர்" எனும் ராட்சத ராட்டினத்தில் பொதுமக்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்கள் அமர்ந்திருந்த ராட்டினத்தின் இரும்பு வயர்கள் அறுந்து கீழே விழுந்தது. பின் ராட்டினம் கீழ் பகுதிக்கு வந்தபோது ராட்டினத்தில் வயர்கள் அறுந்ததால் விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அதில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனைதொடர்ந்து இச்சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் தாமதிக்காமல் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள எந்திரங்களில் தரம் மற்றும் அதன் உறுதி தன்மையை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததால் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவு