தடையை மீறி படகு சவாரி.. பழவேற்காடு ஏரியில் விபத்து
tami nadu May 13, 2019,
பழவேற்காடு ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் சென்னை காசிமேட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் கடந்த 2012-ஆம் ஆண்டு படகு சவாரியின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் சிலர் சட்ட விரோதமாக படகு சவாரியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து புதிய தலைமுறையில் பல முறை செய்தி வெளியானது.

இந்நிலையில் பழவேற்காட்டில் இருந்து படகின் மூலம் முகத்துவாரம் பகுதிக்கு சென்னை காசிமேட்டை சேர்ந்த 16 பேர் சென்றதாக தெரிகிறது. முகத்துவாரத்தை பார்த்துவிட்டு திரும்பி வரும் போது எதிரே வந்த மற்றொரு படகின் மீது மோதியதில் படகில் இருந்த அனைவரும் நிலை தடுமாறி, தண்ணீருக்குள் மூழ்கினர். பின்னர் அருகில் இருந்த மீனவர்கள், அனைவரையும் தூக்கி கரை சேர்த்தனர். அத்துடன் அனைவரும் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மேரி ஜான் (50) என்பவர் உயிரழந்தார்.
கடந்த சனிக்கிழமை பழவேற்காடு நடுவூர் மாதா குப்பத்தில் உள்ள ராஜா என்பவரது வீட்டிற்கு காசிமேட்டில் இருந்து திருவிழாவுக்காக இவர்கள் வந்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த படகு விபத்து குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடையை மீறி படகு சவாரி செய்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தடையை மீறி படகு சவாரி.. பழவேற்காடு ஏரியில் விபத்து