கொடுத்த கடனை திரும்ப தராததால் மன உளைச்சல் ! மூன்று பேர் தற்கொலை
tami nadu April 3, 2019,
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராமன். இவர் தனது மனைவி புஷ்பா மற்றும் மகன் பாபு ஆகியோருடன் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். கண்பார்வையற்ற மகனோடு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சிவராமன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அதில் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வரும் சிவராமன், தான் சிறுகச் சிறுக சேமித்து வைத்த ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரத்தை தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த நாதர் சண்முகம் மற்றும் அவரது சகோதரி பத்மினி ஆகியோருக்கு கடனாகக் கொடுத்து இருந்தது தெரியவந்தது. அவ்வாறு கடன் கொடுப்பதில் கிடைக்கும் மாத வட்டி வைத்துக் கொண்டு தனது பார்வையற்ற மகன் மற்றும் மனைவி உடன் வாழ்ந்து வந்ததாகவும், இந்த நிலையில் கடன் வாங்கியவர்கள் வட்டியையும் கொடுக்காமல் கடனையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.மேலும் பணத்தை கொடுக்குமாறு கேட்டபோது மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. போதிய வருவாயின்றி இளைய மகன் வெங்கடேஷ் அவ்வப்போது கொடுக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்த சிவராமன் நான் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பத்மினியை கைது செய்துள்ளனர் மேலும் தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் மகன் சண்முகத்தை தேடி வருகின்றனர். பொதுவாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களில் அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இங்கு அதற்கு மாறாக, கொடுத்த கடனை திரும்ப பெற வழி இன்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கொடுத்த கடனை திரும்ப தராததால் மன உளைச்சல் ! மூன்று பேர் தற்கொலை