கொடைக்கானலில் அரசு துறைகளின் கட்டிடங்களும் சீல் ?
tami nadu February 12, 2019,
கொடைக்கானலில் உள்ள விதி மீறல் கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான பட்டியலில் பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்களும் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் சுமார் 4000 க்கும் அதிகமான விதிமீறல் கட்டிடங்கள் உள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக அடுக்குமாடி விடுதிகள்,சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள்,தனியார் பள்ளிகள் உட்பட 40 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொடைக்கானல் வாழ் பொதுமக்கள் அனைவரும் இணைந்து நேற்று முழு அடைப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக சுமார் 250 கட்டிடங்களுக்கு சீல் வைக்க, நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் வனத்துறை ஓய்வு இல்லம்,கொடைக்கானல் காவல் நிலையம்,மின் வாரிய உதவி மின் மாற்றி மையம்,கல்வி அலுவலர் அலுவலகம்,சார் பதிவாளர் அலுவலகம்,வானொலி நிலையம்,பிரயண்ட் பூங்கா கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதனைதொடர்ந்து இத்தகவல் அறிந்த பொதுமக்கள்,முன்னுதாரணமாக அரசு கட்டிடங்களுக்கு முதலில் சீல் வைத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொடைக்கானலில் கட்டிடங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள அரசு தரப்பு அதிகாரிகள் பெரும் மன அழுத்தம் மற்றும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கொடைக்கானலில் அரசு துறைகளின் கட்டிடங்களும் சீல் ?