யமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
tami nadu October 13, 2018,
தொழிலாளர் விரோத நடவடிக்கையில் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபடுவதை தடுக்க கோரிய வழக்கில் தமிழக தொழிலாளர் நலத்துறையும், யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பயிற்சி ஊழியர்களாகவும் (apprentices), ஒப்பந்த அடிப்படையிலும் 2500 பேரும், 350 அலுவலக பணியாளர்களும், 814 நிரந்தர ஊழியர்களும் யமஹா மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிற மோட்டார் வாகன நிறுவன ஊழியர்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் யமஹா நிறுவன ஊழியர்களுக்கு மிக மிக குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. பணி பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் நிலையில், தரையை துடைப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.

தொழிலாளர்களிடம் அடிப்படை மனித உரிமைகளை கூட யமஹா நிறுவனம் வழங்குவதில்லை. இதனால் சிஐடியு-வுடன் இணைக்கப்பட்ட சங்கத்தின் மூலம் நடத்திய பேச்சுவார்த்தைகள் சுமூக முடிவெடுக்காத நிலையில் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனிடையே சங்க பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை யமஹா நிறுவனம் எவ்வித காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்துள்ளது. அதன் பின்னர் தொழிலாளர் ஆணையர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ளவில்லை. பணிநீக்கம் செய்ததை ரத்து செய்தால் மீண்டும் பணிக்கு சேர்த்தால் அனைவரும் பணிக்கு திரும்ப தயார் என தெரிவித்தும், நிறுவனம் மறுத்துவிட்டது. பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என தொழிலாளர் இணை ஆணையர் சொன்ன கண்டனத்தையும் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் கணக்கில் கொள்ளவில்லை. அதனால், தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடுபதையும், புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் தடுக்க வேண்டும். தொழிலாளர் நல இணை ஆணையர் அக்டோபர் 3ஆம் தேதி பிறப்பித்த அறிவுரைப்படி சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் கோரிக்கை” வைக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, வழக்கு குறித்து தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகியவை நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> யமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு