உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவு
tami nadu August 24, 2018,
மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ சாந்தி விஜயா உயர்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்த 1997ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என மனுவில் பள்ளி கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு, மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அத்தியாவசியமானது என்றும், ஐந்து வயது முதல் 18 வயது வரை யோகா உள்ளிட்ட உடற்கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 250 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளிலும் கவுரவ ஊதிய அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவு