பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே சேலம் பசுமை வழிச்சாலை- முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே சேலம் பசுமை வழிச்சாலை- முதலமைச்சர் பழனிசாமி

tami nadu

சென்னை சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகதான் சாலை அமைக்கப்படுவதாக பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பேரவையில் சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். பொதுமக்களும் விவசாயிகளும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், தூத்துக்குடி போன்றதொரு சம்பவம் இங்கு நடந்துவிட கூடாது, எனவே பொதுமக்களின் கருத்தை கேட்டு பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் 41 ஹெக்டேர் வனப்பகுதி மட்டுமே இந்தத் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். 

                            

இந்தத் திட்டம் நிறைவேறினால் சேலம் சென்னை பயண நேரம் 2.15 மணி நேரமாக குறையும் என தெரிவித்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய ஆத்தூர் எம்.எல்.ஏ பெரியசாமி, இந்தச் சாலைக்கான அவசியம் என்ன?, தனியார் நிறுவனத்துக்காக நெடுஞ்சாலை அமைக்க அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், சென்னை சேலம் பசுமை வழிசாலை திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுள்ளதாக  பதில் அளித்தார். சாலை போடுவதை தவறு என்று நாங்கள் கூறவில்லை, மக்களிடம் உள்ள எதிர்ப்பை சரி செய்ய கருத்து கேட்பு கூட்டம் நடத்த  வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என ஸ்டாலின் கூறினார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சாலைகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்தச் சாலை அமைக்க அவசரம் காட்டுவது ஏன் என ஸ்டாலின் வினவினார். 

முன்னதாக சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் 1900 ஹெக்டேர் நிலத்தில் 400 ஹெக்டேர் அரசு நிலம் என முதல்வர் கூறினார். பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். மரங்கள் வெட்டப்படுவதற்கு பதிலாக 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், இந்தச் சாலை வனப்பகுதியில் வரும் போது சுரங்க சாலையாக அமைக்கப்படும் என கூறினார். எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை கைவிட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். முன்னதாக சாலை திட்டங்கள் எந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது என பேரவையில் நீண்ட விவாதம் நடைபெற்றது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே சேலம் பசுமை வழிச்சாலை- முதலமைச்சர் பழனிசாமி

Search

Back to Top