கோயில் வளாகத்தில் கடைகள் அகற்றம்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
tami nadu March 16, 2018,
கோயில் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக, இந்து அறநிலையத்துறை சார்பில் மார்ச் 20க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுவரை கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிப்ரவரி 2-ல் ஏற்பட்ட தீ விபத்தில் வசந்தராயர் மண்டபம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோயில் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சங்கரன்கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்சி மலைக்கோட்டையில் கடைகள் நடத்துவோர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் கோயில் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார். கடை விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும் உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணை மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கோயில் வளாகத்தில் கடைகள் அகற்றம்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்