ஆன்லைன் பத்திரப்பதிவு நிலை: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
tami nadu February 16, 2018,
தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முழுவதுமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய பத்திர பதிவுத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்துவது தொடர்பாக, சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், பதிவு செய்யப்படும் சொத்து, சொத்துக்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்பதிவாளரின் கட்டாயப்பணி என்றும் இந்த பணியை பத்திர எழுத்தாளர்களிடமோ, வேறு நபர்களிடமோ ஒப்படைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் பத்திர பதிவு முறை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆன்லைன் பத்திரவு பதிவு முறை தொடர்பாக ஐஐடி பேராசிரியர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், ஆன்லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய, பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ஆன்லைன் பத்திரப்பதிவு நிலை: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு