உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு?
tami nadu December 27, 2017,
உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம், 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது. ஆனால் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.
இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போதுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் கையெழுத்திட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வரை அல்லது 6 மாதங்கள் வரை பதவி நீடிப்பு இருக்கும் எனத் தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி பதவி நீடிப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு?