அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்:வடகொரியா மிரட்டலால் பதற்றம்

america, north Korean, pyongyang, world
பியாங்கியாங்:கொரிய தீபகற்பத்தில், அமெரிக்க போர் கப்பலை, தாக்குதல் நடத்தி அழிக்க தயாராக இருப்பதாக, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.வடகொரியாவின் தந்தை என்றழைக்கப்படும் கிம் இல் சங்கின், பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர், பியாங்கியாங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தி, உலக நாடுகளை அச்சுறுத்தியது.

இதை தொடர்ந்து, வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, அமெரிக்காவின் போர்க்கப்பல், கொரிய தீபகற்பம் விரைந்துள்ளது; அமெரிக்க போர் விமானங்களும் தென்கொரியாவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் இரண்டு போர் கப்பல்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில் அமெரிக்க போர் கப்பலை, குண்டு வீசி அழிக்க போவதாக வடகொரியா நேற்று மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:வட கொரியாவை அச்சுறுத்தும் போர் கப்பலை, குண்டு வீசி, ஒரே தாக்குதலில் எங்களால் அழிக்க முடியும்; அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதன் மூலம் வட கொரியாவின் ராணுவ பலத்தை உலகம் புரிந்து கொள்ளும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்கர் கைது

தென் கொரிய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க நாட்டினர் இருவரை, வட கொரியா சமீபத்தில் அடுத்தடுத்து, கைது செய்தது; அவர்கள் வட கொரியா சென்று, அமெரிக்க திரும்ப முயன்ற போது, வட கொரிய தலைநகர் பியாங்கியாங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உளவு பார்க்க வந்ததாக கூறி அவர்களை,வட கொரியா சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு அமெரிக்க நபர், நேற்று, வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். இதனால், அமெரிக்கா – வட கொரியா இடையே, மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top