வீதி வீதியாக சென்று கமிஷனர் வரி வசூல்
commissioner, income tax, tamil nadu, tiruchirapalli March 24, 2017,
திருச்சி : மணப்பாறை நகராட்சி பெண் கமிஷனர், வீடு வீடாக சென்று வரி வசூலித்து வருகிறார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி கமிஷனராக இருப்பவர், பாப்பம்மாள். நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், ஒரு மாதமாக, நிலுவை வரிகளை கட்டும்படி, மணப்பாறை நகரம் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது.
அப்படியிருந்தும், சொத்து வரியில், 46 லட்சம் ரூபாய், தண்ணீர் வரியில், 57.60 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. தண்ணீர் வரியில் மொத்த தொகை, 1.05 கோடி ரூபாயில், 50 சதவீதத்துக்கும் மேல் பாக்கியுள்ளது, நகராட்சி வருவாயை பாதிக்கும் விஷயமாக உள்ளது.
இதையடுத்து, மாருதி ஆம்னி காரில், கமிஷனர் பாப்பம்மாள், நகராட்சி ஊழியர்களுடன் வீதி வீதியாக சென்று, நிலுவை வரிகளை வசூலித்து வருகிறார்.
பாப்பம்மாள் கூறியதாவது:குடிநீர் வரி கட்டுவதில், மக்கள் சுணக்கமாக உள்ளனர். அதனால், நானே நேரில் வசூலித்து வருகிறேன். குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவோமோ என்ற பயத்தில், வரியை கட்டுகின்றனர். இப்படியாவது, முழுத் தொகையையும் வசூலித்து விடலாம் என்ற ஆவலில் தான், வீதி வீதியாக சென்று வருகிறேன்.
வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க உள்ளோம். சொத்து வரி கட்டாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாப்பம்மாள், போலியோவால் கால் பாதிக்கப்பட்டு, மற்றவர் துணையின்றி நடக்க முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.