ஜெ., மரண விசாரணை: சசி தரப்பு ‛குஷி'

chennai, death, jayalalitha, shashikala, tamil nadu
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்க, மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக இணைத்து விசாரிக்கக் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு தரப்பில் விளக்கம் கோரப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில், இந்த வழக்குத் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் விசாரணை குழு அமைக்க வாய்ப்பே இல்லை. மாநில அரசுதான் விசாரணைக்கு விட வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்காக, குழு அமைத்து விசாரிக்க முடியும். அதனால், இந்த வழக்கில் இருந்து மத்திய அரசை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு, இப்படியொரு பதில் மனுவை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதால், அனேகமாக டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி செய்யப்படும். மாநில அரசுக்கு மனு அளித்து, விசாரணைக் குழு அமைக்கக் கேட்டுக் கொள்ளலாம் என்பதோடு, வழக்கை கோர்ட் முடித்து விடும்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., சசிகலா தரப்பு, மூத்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசு, உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணைக் குழு அமைக்க தயாராக இருக்கிறது என்று சொல்லி, அதற்கேற்ற வகையில், கோர்ட் உத்தரவிட்டால், கடும் சிக்கலாகி விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தோம்.

ஆனால், மத்திய அரசு, எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருப்பது, நிம்மதியை அளித்துள்ளது. இந்த விஷயத்தில், இனி, யாரும் கோர்ட்டுக்குச் செல்லவும் வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top