மத்திய அரசை வளைக்க ஜெயேந்திரரை சந்தித்த தினகரன்
chennai, jayendra bend, tamil nadu March 8, 2017,
சென்னை: நேற்று மாலை, திடீரென காஞ்சிபுரம் சென்ற அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் தினகரன், சங்கர மடத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரை சந்தித்தார்.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் தினகரனுக்கு, சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. சசிகலா, பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் கமிஷனில், பன்னீர்செல்வம் தரப்பினர் கொடுத்த மனுவுக்கு, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீசுக்கு, தான் பதில் அளித்தால் போதும் என்று தினகரன் நினைத்தார். ஆனால், அதை ஏற்க மறுத்து விட்டது தேர்தல் கமிஷன். எனவே, சசிகலா தேர்வையும் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவிக்கவே வாய்ப்புள்ளது என தினகரன் நினைக்கிறார்.
இத்துடன், உறவினர்கள் அனைவரும் தனக்கு எதிராக நிற்பது ; முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு, மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தராதது; அன்னிய செலாவணி மோசடி வழக்கில், தனக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என பல பிரச்னைகளை தினகரன் சந்தித்து வருகிறார். இதற்காக, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர் மூலம் மத்திய அரசை வளைக்க தினகரன் முயற்சித்தார். ஆனால், முடியவில்லை.
எனவே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை சந்தித்து பேச திட்டமிட்டார். நேற்று மாலை, தினகரனுக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தினகரன், காஞ்சிபுரம் சென்று, ஜெயேந்திரரையும், விஜயேந்திரரையும் சந்தித்துப் பேசினார். காஞ்சி காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சசிகலாவுக்கு அழைப்பு அனுப்பியதற்கு, தினகரன் நன்றி கூறினார். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரையும் சிறையில் இருக்கும் சசிகலா விசாரித்ததாகவும் தினகரன் கூறினார். தினகரன் வைத்த கோரிக்கைகளை பா.ஜ., தலைமைக்கு கொண்டு செல்வதாக ஜெயேந்திரரும்; விஜயேந்திரரும் கூறியுள்ளனர்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.