அமெரிக்காவைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்
america, auckland, indian attack, new zealand, world March 8, 2017,
ஆக்லாந்து – நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இந்தியர் மீது இனவெறிப் பேச்சு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இச்செய்தி தற்போதுதான் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இனவெறிப் பேச்சால் பாதிக்கப்பட்ட நரேந்தர்வீர் சிங் என்ற இந்தியர் சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளை வாகனத்தின் உள்ளே இருந்தபடி பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நரேந்தர்வீர் சிங் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வீடியோவில், “சாலையில் நான் அந்த நபருக்கு ஒதுங்கி வழிவிட்டேன். ஆனால் அந்த நபர் என்னை மிரட்டி தவறான வார்த்தைகளால் திட்டினார். என்னை சொந்த நாட்டுக்கு செல்லுமாறு அந்த நபர் கூறினார்” என்று கூறியிருக்கிறார்.‘பஞ்சாபிகளை அவமதித்தனர்’ :
இனவெறி பேச்சுக்களுக்கு உள்ளான நரேந்திரவீர் சிங், நியூஸ்ஷப் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “என்னை மிரட்டிய நபர் சாம்பல் நிற உடை அணிந்திருந்தார். அவர் பஞ்சாபிகள் மீது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்த நபர் சென்றபிறகு நான் உண்மையில் அதிர்ச்சியில் இருந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்தச் சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. அவர் என் அருகில் வரும் போது அவர் என்னை ஆயுதத்தால் தாக்க வருகிறார் என்றுதான் நான் முதலில் நினைத்தேன்.
அவர் தனது காரில் கடந்து செல்லும்போது என்னை மீண்டும் இனரீதியாக தாக்கிப் பேசினார்” என்று கூறினார். கடந்தவாரம் நரேந்திர சிங்கின் நண்பர், பிக்ரம்சித் என்ற நபரும் இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. இத்தாக்குதல் குறித்து நியூசிலாந்து புலம்பெயர்வு தொழிலாளர் சங்க தரப்பில், “நியூசிலாந்தில் சமீபகாலமாக இனரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் வெளிப்படையாக நடப்பதை நாம் கவனித்து வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சமுதாயத்தில் சகிப்புதன்மையற்ற நிலை அதிகரித்துள்ளது” ” என்று கூறப்பட்டுள்ளது. இனரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு இந்தியர்களும் போலீஸாரில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.