சட்டசபையில் அதிசயங்கள் நிகழும்: பாண்டியராஜன் நம்பிக்கை
Assembly election, pandiyarajan, tamil nadu, wonders March 2, 2017,
”தமிழக சட்டசபை கூட்டத்தில், அதிசயங்கள் நிகழும்,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டது, சட்டப்படி செல்லாது என, தேர்தல் கமிஷனிடம், மனு கொடுத்துள்ளோம். அதற்கு, சசிகலா தரப்பினர் பதில் தாக்கல் செய்துள்ளனர்.
இதில், தேர்தல் கமிஷன் நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின், மக்கள் மன்றத்திற்கு செல்ல உள்ளோம். சேலத்தில், முதல் கூட்டம் நடத்த உள்ளோம். மண்டல வாரியாக, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில், பன்னீர்செல்வம் சுற்றுப்பயண விபரம் வெளியிடப்படும்.
விரைவில், சட்டசபை கூட உள்ளது. சட்டசபையில், பல அதிசய நிகழ்வுகள் நடைபெறும். மிக வித்தியாசமான நிகழ்வும் நடைபெறும். சட்டசபையில் ஓட்டெடுப்பு என்பது, இன்னும் முடிந்து விடவில்லை.
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது என, பல ஓட்டெடுப்புகள் நடத்த வேண்டி உள்ளது. அப்போதும், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.
அ.தி.மு.க., என்பது, ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே, தர்ம யுத்தத்தை துவக்கி உள்ளோம். பொதுக்குழு உறுப்பினர்களில், பெரும்பாலானோர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம், எங்களுக்கு கிடையாது. குடும்ப ஆதிக்கம் ஒழிந்து, பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம். அ.தி.மு.க., ஒரே இயக்கமாக இருக்க வேண்டும்; இதில், பிரிவினை வந்து விடக்கூடாது. விரைவில் கட்சியும், ஆட்சியும் எங்கள் கைக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.