ஆட்சி கவிழும்; தேர்தலுக்கு தயாராகுங்க : மாவட்டச் செயலர்களை முடுக்கிய ஸ்டாலின்

chennai, dmk, MK stalin, tamil nadu
சென்னை: முதல்வர் பழனிச்சாமி அரசு, எந்த நேரத்திலும் கவிழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால், உடனே, தேர்தல் வரலாம். எனவே, தேர்தலை எதிர்கொள்ள, நாம் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், கட்சியினரை தேர்தலை நோக்கி உசுப்பி விடுவதற்காக, நேற்று, சென்னை, அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய மாவட்டச் செயலர்கள், உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க., தனித்தே எதிர்கொள்ளலாம். இன்றைக்கு, அ.தி.மு.க., என்ற பிரதான கட்சி, சிதறுண்டுள்ள நிலையில், தி.மு.க.,வுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், யாரையும் கூட்டணி சேர்க்கத் தேவையில்லை. காங்கிரசோடு கூட கூட்டணி தேவையில்லை. பார்லிமெண்ட், சட்டசபை தேர்தலுக்கு மட்டும் காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொள்ளலாம். அதேபோல, பழனிச்சாமி அரசை விமர்சிக்கலாம். இறந்து போன ஜெயலலிதாவை விமர்சிப்பதை விட்டு விடலாம். அதை மக்கள் ரசிக்கவில்லை என்று கருத்துச் சொல்லியுள்ளனர்.

மாவட்டச் செயலர்கள் கருத்துக்களையெல்லாம் கேட்டு, அதை குறிப்பெடுத்துக் கொண்டு ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படுகிறது.

அவர் பேசியுள்ளதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில், கட்சி, மிகக் குறைய சீட் எண்ணிக்கையில், ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்பதில், கட்சியின் எல்லா நிலைகளில் இருப்பவர்களுக்கும் வருத்தம் இருப்பதை நான் அறிகிறேன். ஆனால், அதற்கான, காரணத்தைச் சொன்னால், பலருக்கும் வருத்தம் ஏற்படும். அதனால், அவர்கள் தாங்களாகவே திருந்திக் கொள்ளட்டும் என விட்டு விட்டேன். ஆனால், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தவறு என்றால், அவர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்படுவார்கள். கட்சி தோற்க காரணமாக இருந்தவர்களை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்.

முதல்வர் பழனிச்சாமி, தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். இந்த ஓட்டெடுப்பை, நியாயமாக நடத்த வேண்டும் என்றுதான் கோரினோம். அதற்கு, ரகசிய ஓட்டெடுப்பு கோரினோம். ஆனால், சபாநாயகர் தனபால் ஒப்புக் கொள்ளவில்லை.

அதனால், சட்டசபைக்குள் தர்ணா செய்தோம். உடனே, நம்மை திட்டமிட்டபடி, வெளியேற்றி விட்டு, ஓட்டெடுப்பை நடத்தி முடித்து, வெற்றி பெற்றதாகவும் அறிவித்தனர்.

இதற்கு முன்பாக, ஒட்டெடுப்பு நாளில் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஒத்திகை பார்த்து விட்டு, சபைக்கு வந்துள்ளனர். அதற்கு காரணம், சபையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, நாம், முதல் நாள் பேசிய அத்தனை விஷயங்களும் அச்சுபிசகாமல் அவர்களுக்கு போய் சேர்ந்ததுதான். ஆக, இங்கிருக்கும் ஏதோ ஒரு கறுப்பு ஆடுதானே, அதை, அந்தப் பக்கம் தெரிவித்திருக்க முடியும். அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. கறுப்பு ஆட்டை கட்டாயம் வெளியேற்றுவேன்.

பழனிச்சாமி அரசு, நீண்ட காலத்துக்கு நீடிக்காது. விரைவில் கவிழ்ந்து விடும். அதனால், எந்த நேரமும் தேர்தல் வரலாம். தேர்தலுக்கு இப்போதிலிருந்தே நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு மாவட்டச் செயலரும், இந்த நிமிடத்தில் இருந்தே, தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை, தொடர்ந்து தொகுதிகளில் செயல்படுத்த வேண்டும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. இந்த முறை, கட்சி சார்பில் போட்டியிடும் 90 சதவீத வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான், நம்முடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசோடு கூட்டணி வேண்டாம் என்று, மாவட்டச் செயலர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் தான் நமக்கு, இப்போது இருக்கும் நம்பிக்கையான கூட்டணி. அதனால், உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கு மரியாதையான சீட்களை ஒதுக்கிக்
கொடுத்து, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாவட்டங்களில் தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கும் போது, எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது.

நமக்கு, சசிகலா முதல் எதிரி என்றால், பன்னீர்செல்வம் இரண்டாவது எதிரி, தீபா மூன்றாவது எதிரி. அதனால், அவர்களோடு நமக்கு எந்த ஒட்டும் உறவும் வேண்டாம். எதிரிகள் அனைவரையும், சேர்த்து வீழ்த்த வேண்டும். வைகோ, விஜயகாந்த பற்றி எதையும் பேசி, அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top