ஹைட்ரோ கார்பன் திட்டம்: அனுமதி பெறவில்லையாம்
hydro-carbon plan, sriperamputhur, tamil nadu March 1, 2017,ஸ்ரீபெரும்புதுார் : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க, தமிழக அரசிடம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அனுமதி பெறவில்லை என, ஒரகடத்தில் நடைபெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டட திறப்பு விழாவில், தமிழக அமைச்சர், கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடம், ‘சிப்காட்’ தொழில் வளாகத்தில், 7,782 சதுர அடி பரப்பளவில், 1.90 கோடி மதிப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, மாசு கட்டுப்பாட்டு வாரிய முதன்மை செயலர், அதுல்ய மிஸ்ரா தலைமையில், நேற்று நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர், கே.சி.கருப்பணன், குத்துவிளக்கேற்றி கட்டடத்தை திறந்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர், கஜலட்சுமி, மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர், சுந்தரகோபால், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர், கண்ணன், சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில், அமைச்சர் கருப்பணனிடம், ‘நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதியை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், மத்திய அரசு பெற்றுள்ளதா’ என, கேள்வி எழுப்பினர். அதற்கு, ”அனுமதி பெறவில்லை,” என, அமைச்சர் பதில் அளித்தார்.
மேலும், ”எண்ணெய் எடுக்க எங்களிடம் அனுமதி பெற வரும் போது, அனுமதிப்பதா, வேண்டாமா… என்பது குறித்து அரசு முடிவு எடுக்கும். காஞ்சிபுரத்தில் கைத்தறி சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, அரசு பரிசீலனை செய்கிறது,” என்றார்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.