கார்கில் தியாகி மகளுக்கு மிரட்டல்; போராட்டத்தில் இருந்து விலகினார்
daughter, India, indian army, New delhi, sexual harassment March 1, 2017,புதுடில்லி: கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரரின் மகள், தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏ.பி.வி.பி., அமைப்பினருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாகவும், அந்த பெண் அறிவித்துள்ளார்.
எதிர்ப்பு:
டில்லி, ஜே.என்.யு., பல்கலை மாணவர், உமர் காலித், ஷெஹ்லா ரஷித் ஆகியோருக்கு, கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வரும்படி, ராம்ஜாஸ் கல்லுாரி அழைப்பு விடுத்தது. அதற்கு, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்பாட்டம்:
இதையடுத்து, உமர் காலித், ரஷித் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, வாபஸ் பெறப்பட்டது. இதை கண்டித்து, ராம்ஜாஸ் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, ஏ.பி.வி.பி., தொண்டர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பலதரப்பில் கண்டனம் எழுந்தது.
கார்கில் தியாகி மகள்:
கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரரின் மகளும், லேடி ஸ்ரீராம் கல்லுாரி மாணவியுமான, குர்மெஹர் கவுர், 20, ஏ.பி.வி.பி., அமைப்பினருக்கு எதிராக, சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்.
விலகல்:
இந்நிலையில், ஏ.பி.வி.பி., அமைப்பை சேர்ந்த சிலர், தனக்கு, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்த, குர்மெஹர் கவுர், இனி, அந்த அமைப்பினருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கூறினார். இந்நிலையில், குர்மெஹருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக.அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கு எதிராக, போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.