மே 15க்குள் உள்ளாட்சி தேர்தல் ?

chennai, election, may 15, tamil nadu
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல், மே மாதம், 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், ‛ உத்தேச தேதியை கூறாமல், சரியான தேர்தல் தேதியை தெரிவிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்தல் அறிவிப்பு முறைப்படி இல்லை:

தமிழகத்தில், 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.’உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை’ என, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ‘பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும்; ஆனால், தேர்தல் அறிவிப்பு, முறைப்படி இல்லை என்பதால், அதை ரத்து செய்கிறேன்; டிசம்பருக்குள், புதிய அறிவிப்பு வெளியிட்டு, தேர்தல் நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, கடந்த மாத இறுதியில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் திட்டவட்டம்:

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், அவகாசம் கோரினார். பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். விசாரணையை, பிப்., 10க்கு(இன்று), டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மே மாதம், 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‛உத்தேச தேதியை கூறாமல், சரியான தேதியை தெரிவிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top