சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின்

chennai, dmk, MK stalin, tamil nadu
சென்னை: ‛தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடரில் சபாநாயகர் தனபால் மீது தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்’ என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இடைப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது சபாநாயகர் தனபால் முறையாக நடந்து கொள்ளவில்லை. அவர் சசிகலாவின் பினாமி ஆட்சியை காப்பாற்றும் நோக்குடன் செயல்பட்டார். சட்டசபை விதிகளின்படி, எதிர்கட்சியினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முடியாது. சட்டசபை ல் அடுத்த கூட்டத்தொடரில் சபாநாயகர் தனபால் மீது தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்.

கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி:

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வு காரணமாக சில உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ட்ரக்யோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பேச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. விரைவில் நலம் பெறுவார்.

உள் காயம்:

சட்டசபையில் சபை காவலர்கள் என்னை குண்டுகட்டாகி துாக்கி வெளியேற்றினர். அதனால், உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. வெளி காயம் எதுவும் இல்லை. உள்காயம் இருக்கிறது. தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்க்க உள்ளேன்.

* வைகோ ஒரு அரசியல் ஞானி. அவரின் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.

சசிக்கு கோபம்:

* சசிகலா எப்படியாவது முதல்வர் ஆகி விட வேண்டும் என்று முயற்சித்தார். ஒரு நாள் முதல்வராக ஆகி இருந்தால் கூட சிறையில் ‛ஏ’ வகுப்பு அறை கிடைத்திருக்கும். அப்படி, எதுவும் நடக்கவில்லை. முதல்வர் ஆக முடியாமல் சிறைக்கு போக வேண்டிய நிலை உருவானதால் ஏற்பட்ட கோபத்தை ஜெ., சமாதிக்கு சென்று சபதம் எடுப்பது போல் வெளிப்படுத்தி உள்ளார்.இவ்வாறு ஸ்டாலின் பேட்டியளி்த்தார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top