‛பினாமி' முதல்வரின் வெற்றி செல்லாது: ஸ்டாலின்

chennai, dmk, MK stalin, state assembly election, tamil nadu
சென்னை: எதிர்க்கட்சிகளே இல்லாத சபையில், பெங்களூரு சிறையில் உள்ள ஊழல் குற்றவாளியின் ‘பினாமி’ முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல். நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (பிப்.,19) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பினாமி ஆட்சி:

ஜனநாயகத்தில் மக்களின் குரலே மதிப்பு மிக்கது. அவர்களின் தீர்ப்பே மகத்தானது. ‘தமிழகத்தில் நடைபெறும் குற்றவாளியின் பினாமி ஆட்சியைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்பதே தமிழக மக்களின் இன்றைய ஒரே குரல் – ஒற்றை நோக்கம்.


ஜனநாயகம் செத்த மன்றம்:

மக்களின் குரலை எதிரொலிப்பதற்கான இடம்தான் சட்டசபை. அந்த சட்டமன்றத்தை ‘ஜனநாயகம் செத்த மன்றமாக’, பிப்., 18ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது ஆக்கிவிட்டார் ஆளுங்கட்சியின் சபாநாயகர்.

கூவத்தூர் விடுதி எனும் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வேறு பக்கம் தாவி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் மனசாட்சிப்படி சுயசிந்தனையோடும், சுதந்திரமாகவும் வாக்களித்து விடக்கூடாது என்பதற்காகவும், அமைச்சர்களின் கார்களில் திணிக்கப்பட்டு சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

தமிழக மக்களின் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு நியாயமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதைப் பேரவையில் வலியுறுத்த முயன்றோம்.

குற்றவாளி மனதை குளிர்விக்க:

சபாநாயகரோ எப்படியாவது இந்த அரசைக் காப்பாற்றி, பெங்களூரு சிறையில் உள்ள சொத்து குவிப்பு ஊழல் குற்றவாளியின் மனதை குளிர்விக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீட்டப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டினார்.

குற்றவாளியின் வழிகாட்டுதல்படி, பினாமி ஆட்சி நடத்தும் இடைப்பாடி பழனிச்சாமி அவர்களும், கூண்டுப் பறவைகளான எம்.எல்.ஏக்களும் பறந்து விடுவதற்கு முன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.

பினாமி முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமியின் பக்கம் இருப்பவர்கள் உண்மையாகவே ஆதரிக்கிறார்களா, நிர்பந்தத்தால் அந்தப் பக்கம் இருக்கிறார்களா என்ற கேள்வி எங்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடன் இத்தனை காலம் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இருந்தது.


பெங்களூரு சிறையல்ல:

இந்தப் பேரவை என்பது பெங்களூரு சிறைச்சாலை அல்ல என்பதை சுட்டிக்காட்டி, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால், வாக்கெடுப்பை இன்னொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன்.
சட்சபையில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றன என்பதை நான் ஒப்புகொள்கிறேன். அதற்காக, நான் சபாநாயகரை சந்தித்து வருத்தம் தெரிவித்தேன்.

மாறுவேடத்தில் போலீஸ்:

வழக்கத்திற்கு மாறாக, அவைக் காவலர்கள் அதிக அளவில் இருந்தனர். பேரவை பணியில் இல்லாத பிற பணிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களின் காக்கி சீருடைக்குப் பதில் சபைக்காவலர்களின் வெள்ளை உடையில் மாறுவேடத்தில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்டிருந்த எங்களை சபைக் காவலர்களும், அவர்களின் உடையில் உள்ளே அனுப்பப்பட்டிருந்த காவல்துறையினரும் மிக மோசமான முறையில் செயல்பட்டு, பிடித்து இழுத்து, சட்டையைக் கிழித்து, தாக்குதல் நடத்தி, ஷூ காலில் மிதித்து வெளியே தூக்கிப் போட்டார்கள். இந்த அராஜகத்தை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த ஊடகத்தினரின் முன் நான் அம்பலப்படுத்த வேண்டியதாயிற்று.


வெட்கேடான செயல்:

அதன்பிறகு, எதிர்க்கட்சிகளே இல்லாத சபையில், ஆளுங்கட்சியின் இரண்டு அணிகள் மட்டுமே இருந்த நிலையில், வாக்கெடுப்பு என்ற ஓரங்க நாடகம் நடத்தி, அதில் பெங்களூரு சிறையில் உள்ள ஊழல் குற்றவாளியின் பினாமி முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயலாகும்.


நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது:

சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு முறை நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் அதனை முன்மொழிய 6 மாதகால அவகாசம் வேண்டும். ஆனால், பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டபோது, இரண்டு முறை அந்தத் தீர்மானத்தை பினாமி முதல்வர் முன்மொழிந்தார். இதுவே சட்டமீறலாகும். பேரவை விதிகளின்படி, இந்தத் தீர்மானம் செல்லாது. செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கத்தல்ல.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top