கூவத்தூர் முதல் கோட்டை வரை போலீஸ் குவிப்பு

chennai, kuvattur, minister edappadi palanisamy, tamil nadu
சென்னை: சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருவதால், கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நம்பிக்கை ஓட்டெடுப்பு:

சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 124 எம்.எல்.ஏ.,க்கள், சென்னையை அடுத்த கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று(பிப்.,18) காலை அங்கிருந்து கோட்டைக்கு பஸ்களில் அழைத்து வரப்பட உள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால், கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டையிலும், கோட்டையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காமராஜர் சாலையில், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, மர்ம நபர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.

போலீஸ் யார் பக்கம்? :

கூவத்துார் சொகுசு விடுதியில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான அமைச்சர் ஒருவர், பெண் போலீஸ் அதிகாரியை கண்டபடி திட்டி உள்ளார். அதை, மற்ற போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து உள்ளனர். அத்துடன் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை), கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா முடிந்ததும், சசிகலாவின் சகோதரர் திவாகரனை, போலீஸ் அதிகாரிகள் கட்டித் தழுவி உள்ளனர். இது, காவல் துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top