பெங்களூருலிருந்து ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாதீர்கள் : முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

chennai, minister edappadi palanisamy, MK stalin, New CM, tamil nadu
சென்னை : புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாமல் இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை :

2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான “ஹேட்ரிக்” சாதனை செய்திருக்கிறது. அப்படி தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற கட்சி தலைவரை பதவியேற்றுக் கொள்ள இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் அழைத்திருக்கிறார்.தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே நோக்கமாக இருந்தது. பதவிக்காக அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிகளோ, உள்கட்சி குழப்பங்களோ, அதிகாரப் போட்டியின் விளைவான கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டங்களோ, க்ரீம்ஸ் சாலை பட்டாசு வெடிக்கும் காட்சிகளோ, மாநிலத்தின் நலனுக்கு எவ்விதத்திலும் ஆபத்தாக முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறை காட்டியது.

அவசர கோலம் :

பதினைந்து தினங்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அளித்திருக்கும் காலக்கெடு குதிரை பேரத்திற்கு வித்திடும் என்பது ஒரு புறமிருக்க, அவசர அவசரமாக அள்ளித் தெளித்த கோலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடப்பது தமிழக நலனுக்கு உகந்ததாகவோ, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் வகையிலோ எவ்விதத்திலும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்றுக் கொள்கிறார் என்றும், அதற்கான அழைப்பிதழ் வந்திருக்கிறது என்றும், நான் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக சேலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் எனது உதவியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆகவே அவசர கோலத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாதீர்கள் :

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், “பெங்களூர் ஜெயிலுக்கு” சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற “ஆட்டுவித்தலுக்கு” ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

English summary:

Chennai: As the new Chief Executive Edappadi Palanichany DMK leader MK Stalin on his Facebook page that took to the statement yesterday. He also asked to be turned on by remote control.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top