ஊரெங்கும் கறிக்குழம்பு வாசம்… ஜல்லிக்கட்டு பாசம்….!

Uncategorized

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடந்து முடிந்திருக்கிறது. வெளியூர் மக்கள், இளைஞர்களால் அவனியாபுரம் பகுதியே ஜனத்திரளால் அதிர்ந்தது.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரே ஜல்லிக்கட்டின் குறியீடாக உலகம் முழுவதும் அறியப்பட்டாலும் அதற்கு இணையாக அவனியாபுரம், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் மிகவும் பிரபலமாகும்.
 
அதுவும் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் நடைபெறும் ஒரே ஜல்லிக்கட்டு இதுவென்பதால் மாநகர் மக்களும் இங்கு திரண்டு விடுவார்கள்.  இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மாநகரட்சி நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலிஸ் கமிஷனரும் தலைமையேற்று செய்வார்கள். 

காலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். 
இந்தமுறை வழக்கத்தை விட அதிகமாக 1257 மாடுபிடி வீரர்கள் வந்திருந்தாலும் மருத்துவ மற்றும் உடல் தகுதியில் 717 பேர மட்டுமே தகுதி பெற்றனர். 

இவ்வளவு பேர் மாடு பிடிக்க வந்தாலும் மொத்தமாக அவர்களை அனுமதிக்க முடியாது என்பதால் சுழற்சி முறையில் நேரம் ஒதுக்கி 150 வீரர்களை் மட்டுமே களத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர். 

தகுதியான 919 காளைகள் கலந்து கொண்டன. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து காளைகள் வந்தன.

அவனியாபுரத்தில் அனைவரும் நேரடியாக ஜல்லிக்கட்டை காண முடியாது என்பதால், ஜல்லிக்கட்டு திடலின் சுற்றுப்புறங்களில் மிகப்பெரிய எல்.இ.டி ஸ்கிரீன்கள் ஆறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

வாடிவாசலிலிருந்து இரண்டு பக்கமும் பார்வையாளர்கள் மைதானத்துக்குள் வந்து விடாதபடி மூங்கில் கழி தடுப்புகள் மீது இரும்புகம்பி வலை தடுப்புகளால் அடைக்கப்பட்டனர்.

காளைகள் நிற்குமிடம், பார்வையாளர் பகுதியில்  சி.சி.டி.வி. வைக்கப்பட்டு விதிமீறல்கள் நடக்கிறதா என்பது கண்காணிக்கப்பட்டது பத்துக்கும் மேற்பட்ட மொபைல் மெடிக்கல் யூனிட்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கால்நடைகளுக்கு தனியாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பத்துக்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் அதிகாரிகள் ஸ்பாட்டில் இருந்தார்கள்.

ஊரெங்கும் வீடுகளில் கறிக்குழம்பு வாசம் மூக்கை துளைத்தது. இன்றுதான் தங்களுக்கு பொங்கல் திருநாள் என்று உள்ளூர் மக்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அதே நேரம் வெளியூர்க்காரர்கள் ஜல்லிக்கட்டை நேரில் காண அவனியாபுரம் வந்திருக்கும்போது, உள்ளூர் மக்களில் பலரோ வெளியே வராமல் வீட்டில் அமர்ந்து டிவியில் ஜல்லிக்கட்டை பார்த்து ரசிப்பதுதான் நகைமுரன்.

வெளியூர் மக்கள் பசியாற வெரைட்டியான சாப்பாட்டு பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டது. சுடச்சுட முறுக்கு, அதிரசம், காராச்சேவு சுட்டு விற்கிறார்கள். முறுக்கு விலை இரண்டு, டீ விலை ஏழு ரூபாய்தான். பிழைக்கத்தெரியாத மக்களாக இருக்கிறார்கள்.
அவனியாபுரத்துக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்துக்கு சாலை பிரியும் இடத்திலயே வாகனங்களை நிறுத்தி உள்ளே நடந்து செல்லவேண்டும். காவல்துறை மிகவும் Hஅப்கப்னெவாக மக்களிடம் சேவையாற்றி வருவதை ஆச்சரியமாக பார்க்க முடிந்தது

செ.சல்மான்.

படங்கள் : எம்.விஜயகுமார், ஈ.ஜெ.நந்தகுமார், வு.சதீஷ்குமார், க.விக்னேஷ்வரன். 
வித்யா காயத்ரி.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top