7 கோடி தமிழர்களுக்கு 6,200 தீயணைப்பு வீரர்கள்தான்…!
Uncategorized February 4, 2017,
வர்தா புயல் தாக்கத்தால் சென்னை முடங்கி இருந்தபோது தமிழகம் முழுவதும் இருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள்தான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் சென்னையில் இருந்த போது 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்த பட்டார்கள் மின்சாரம் இல்லாததால் செல்போனில் கூட சார்ஜ் ஏற்ற முடியாத கொடுமை.
வர்தா புயல் என்று இல்லை ,எந்தப் பேரிடர் சம்பவங்கள் (புயல்,வெள்ளம்) எந்தப் பகுதியில் நடந்தாலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை அந்தப் பகுதிக்கு வரும்படி அரசு சொல்கிறது. இன்னொருபுறம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 320 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன அவற்றில் 6,200 வீரர்கள் பணிபுரிகின்றனர். 2,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மாவட்ட அலுவலர் முதல் முன்னணி தீயணைப்புப் பணியாளர் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அரசின் அலட்சியத்துக்கு உதாரணமாகப் பல விஷயங்களைச் சொல்லலாம். குறிப்பாக இதைச் சொல்லலாம். தீயணைப்பு துறைக்கு 180 சிறுநுரை கலவை ஊர்தி (chemical foam) அரசால் வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஊர்தியை இயக்குவதற்கு புதிய பணியாளரோ, ஓட்டுனரோ நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களே அந்த ஊர்தியை இயக்கவும், பராமரிக்கவும் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் வேலைப் பளு ஏற்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத் தலை நகரங்களிலும் Fire fighting bullet கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் ஓட்டுநர் பணியிடங்கள் உருவாக்கவில்லை.

தமிழகத்தில் 7 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.அவர்களைக் காப்பதற்கு 80,000 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தேவை. ஆனால் 6,200 பணியாளர்களே உள்ளனர்.
ஒவ்வொரு 15 கி .மீ-க்கு ஒரு தீயணைப்பு நிலையம் இருக்கவேண்டும். ஆனால், தமிழ் நாட்டில் 30 கி.மீ-க்கு ஒரு தீயணைப்பு நிலையங்களே உள்ளன. மெட்ரோ சிட்டிகளான சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 15 கி.மீ-க்கு ஒரு தீயணைப்பு நிலையம் உள்ளது.
சிவகாசி போன்ற இடங்களில் பட்டாசு விபத்துகளை எல்லாம் தடுக்க 15 கி.மீ -க்கு ஒரு நிலையம் இருக்கவேண்டும். ஆனால் மொத்த சிவகாசிக்கே ஒரே ஒரு தீயணைப்பு நிலையம்தான் உள்ளது.
ஆபத்து காலங்களில் உதவும் துறைக்குக் கூடவா அதிக பணியாளர்களை நியமிக்கக் கூடாது. அரசு நடவடிக்கை எடுக்குமா?
– கா .அசோக் பால் ராஜன் (மாணவப் பத்திரிகையாளர்)
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.