‘அன்று அக்னி பார்வையில் சிக்கியவர்… இன்று அமைப்பு செயலாளர்’ – சசிகலாவின் சாஃப்ட் மூவ்
Uncategorized February 4, 2017,
அ.தி.மு.க வின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் சசிகலா. பட்டியலை பார்த்த அ.தி.மு.க வின் முன்னணியினருக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான், காரணம் இவர்களில் பலர் ஒருகாலத்தில் இதே சசிகலாவினால் ஒரம் கட்டபட்டவர்கள் என்பதுதான் வேடிக்கை. அன்று வேண்டாதவர்களாக இருந்தவர்களை இன்று வழிய சென்று பொறுப்பு வழங்கியுள்ளார் என நகைக்கிறார்கள் அ.தி.மு.க வினர்.
செங்கோட்டையன் அ .தி.மு.க-வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நன்கறிந்தவர். ஜெயலலிதா, வாகனத்தில் சென்று பிரசாரம் செய்த காலத்தில், “செங்கோட்டையன் கொடுத்த ரூட் தானே” என்று ஜெயலலிதா கேட்பார். அதன்பின்னர்தான் ஓ.கே சொல்வார். அந்த அளவுக்கு செல்வாக்காக வலம் வந்தவர் செங்கோட்டையன்.
கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்ததும் அமைந்த முதல் அமைச்சரவையில் இடம் பிடித்தவர். சில மாதங்களில் அமைச்சர் பதவி பிடுங்கபட்டு, டம்மி ஆக்கப்பட்டார். சசிகலா தரப்புக்கு எதிராக செங்கோட்டையனின் சில நடவடிக்கைகள் இருந்தன என்ற கோபத்தில்தான் செங்கோட்டையன் டம்மியாக்கபட்டார் என்ற தகவல் அப்போது அ.தி.மு.க-வில் இருந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரால் கட்சியில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. அவர் மரணத்துக்குப் பின் செங்கோட்டையன் சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட போகிறார் என்ற பேச்சு எழுந்ததும், சசிகலா தரப்பில் இருந்து முக்கிய உறவினர் ஒருவர் செங்கோட்டைன் வீட்டுக்கே சென்று அவரைச் சமாதானம் செய்தார். அதன்பின் சசிகலாவின் விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டத் தொடங்கினார். அதற்கு பரிசாகத்தான், எந்த சசிகலாவின் அழுத்தத்தால் கட்சியில் இருந்து ஓரம்கட்டபட்டாரோ, அதே சசிகலாதான் இன்று அமைப்புச் செயலாளர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கி சரிகட்டியுள்ளார்.
அதே போல், தென் மாவட்ட அ.தி.மு.க-வில் பவர் புல் நபராக வலம் வந்த நயினார் நாகேந்திரன் கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்து இருந்த நயினாரின் திடீர் சரிவுக்குக் காரணம், சசிகலா குடும்பத்தினர் ஒருவருடன் நயினார் முட்டிக்கொண்டதுதான் என்று கூறப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு, நயினார் நாகேந்திரன் பெயர் பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சசிகலா 2011-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு, போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றபட்ட நேரத்தில் போயஸ் கார்டனே கதி என்று கிடந்தவர்தான் கோகுல இந்திரா. சசிகலாவின் இடத்தை கோகுல இந்திரா பிடிக்க போகிறார் என்று அ.தி.மு.க-வில் பேச்சும் எழுந்தது. கோகுல இந்திராவும் “அம்மாவுக்கு இப்போது எல்லாமே நான் தான்” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்ட நேரத்தில் சசிகலா ரீ என்ட்ரி ஆனார். வந்த சில மாதங்களிலேயே கோகுல இந்திராவின் அமைச்சர் பதவிக்கே ஆபத்து வந்தது.
கோகுல இந்திராவை கண்டாலே, சசிகலா அக்னி பார்வை பாரக்கத் தொடங்கினார். அக்னி பார்வையால் யாரைச் சுட்டெறித்தாரோ அதே நபருக்குதான் இப்போது சசிகலா அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். ஜெயலலிதாவிடம் பாராமுகம் காட்டிய சைதை துரைசாமியும் சசிகலாவின் கடைகண் பார்வையினால் பதவியைப் பெற்றுள்ளார்.
“கானா” என்று தென் மாவட்ட தி.மு.க-வில் கோலோச்சி வந்த கருப்பசாமி பாண்டியன், அ.தி.மு.க-வுக்கு அணிமாறிய பிறகு எந்தப் பதவியும் இல்லாமல் இருந்தார். சசிகலா உறவுகள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தவருக்கு இப்போது பதவி வந்துள்ளது. அதே போல் வரகூர்.அருணாசலம், அன்பழகன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவினால் ஓரம் கட்டி வைக்கபட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் இப்போது பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கபட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலவனர்களின் பெயர்கள் சசிகலாவின் அக்கா மகன் தினகரன் டிக் செய்யபட்ட நபர்களுக்குதான் வழங்கபட்டுள்ளது. குறிப்பாக நயினார், கருப்பசாமி பாண்டியன், உமாதேவன், நிறைகுளத்தான் உள்ளிட்டவர்கள் டி.டி.வி.தினகரன் மூலமே பதவியைப் பிடித்துள்ளார்கள். இந்தப் பட்டியலில் முக்குலத்தோர் சமூகத்துக்கு இணையாக பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் இருந்த அதிருப்தியைக் களைவதற்குதான் இந்த நடவடிக்கை என்கிறார்கள்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை என்பது உண்மைதான்!
– அ.சையது அபுதாஹிர்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.