ஷீலா பாலகிருஷ்ணன் திடீர் விலகலுக்கு மு.க.ஸ்டாலின் சொல்லும் பகீர் காரணம்

Uncategorized

முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பதவியிலிருந்து விலகியிருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி காரணத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியும், ஏற்கெனவே இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தைக் கூட்டியும் சீமாந்திர மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளார்கள். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்துக்கும் பேராபத்து ஏற்படுத்தி விட்டதாக கவலையடைந்துள்ளார்கள். சீமாந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலேயே இது போன்று தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பாலாறு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் பிரச்னை எழுப்பிய போது பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,"பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை அவர்கள் தடுப்பணை கட்ட முடியாது” என்று பதிலளித்தார். ஆனால் நடைபெறும் நிகழ்வுகள் அவர் அளித்த பதிலுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. சீமாந்திர மாநில அரசு தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டும் முயற்சிகளையும், ஏற்கெனவே இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தும் வருகிறது. பாலாறு தண்ணீர் தடுக்கப்படுவதால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, கல்பாக்கம் அணு மின் நிலையமும் பாதிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 4.50 லட்சம் ஏக்கரில் உள்ள விவசாயத்துக்கான நீர் ஆதாரம், குடிநீர் ஆதாரம் எல்லாம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக நலன்களை பாதுகாக்க அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு அக்கறையும் காட்டவில்லை.

அதற்கு பதிலாக, "முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு தான் முதலமைச்சராவது எப்படி என ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுக தலைமைக்கும்”, “அதிமுக தலைமைக்கு விருப்பத்திற்கு மாறாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் அதிகாரிகளும், ஆலோசகர்களும் செயல்பட முடியாத சூழ்நிலையும்” இன்றைக்கு தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை நிலைகுலைய வைத்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பதவியிலிருந்து விலகியிருப்பது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் துவக்கமாகவே தெரிகிறது. இப்படியொரு நிலையற்ற ஆட்சியில் பாலாறில் புதிய தடுப்பணைகள், சர்க்கரை மானியம் ரத்து செய்யப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாமல் போனது, “நீட் தேர்வு” சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் குழப்பம், மெரினா புரட்சியான மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை காவல்துறை அதிகாரிகளே சீர்குலைத்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்துக்கு ஏற்படும் பிரச்னைகள், மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்தி, தமிழக நலனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top