சின்னம்மா துணை கேப்டன்… தீபா மண்குதிரை! கலகலக்கும் வாட்ஸ்அப் கலாட்டா
Uncategorized February 4, 2017,
'அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மாவின் மறைவுக்குப்பிறகு சின்னம்மா துணை கேப்டனாக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியினர் செல்கின்றனர்' என்ற வாட்ஸ்அப் பதிவு வைரலாகி வருகிறது.
"அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மா, துணை கேப்டன் சின்னம்மா. அம்மா மறைவுக்குப்பிறகு 2 கோடி தொண்டர்களை வழிநடத்தி வருகிறார் சின்னம்மா. இந்த நேரத்தில் மாற்றுக்கட்சியினரால் வரும் ஆபத்தை விட உள்கட்சியினரால் பல்வேறு சோதனைகள் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வருகிறது. அதாவது தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியில் இருந்து சிலர் செல்கின்றனர். அவர் ஒரு மண் குதிரை. அவரை நம்பி பயணிப்பவர்களின் நிலைமை பரிதாபமாகும். கேப்டனுக்கு மட்டுமே கப்பலை இயக்கத் தெரியும். கேப்டன் இல்லாத சமயத்தில் துணை கேப்டன் அவரது பணியை செய்வார். அரசியலே தெரியாத தீபா, எப்படி அவரை நம்பி வருபவர்களை காப்பாற்றப் போகிறார் என்பது தெரியவில்லை" என்ற வாசகம் பெரும்பாலான வாட்ஸ்அப் குரூப்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பதிவு செய்த அ.தி.மு.க உறுப்பினர் சரவணன் கூறுகையில், "எதிர்க்கட்சிகளால் வரும் ஆபத்தை அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் சமாளித்து விடுவார்கள். 'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்' என்றுதான் தீபாவை பார்க்கிறோம். அவரால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அம்மா இல்லை என்ற வருத்தம் எங்களை வாட்டினாலும் சின்னம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்" என்றார்.
இந்த வாட்ஸ்அப் பதிவு குறித்து தீபாவிடம் கருத்துக் கேட்க பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வத்தை கூட மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சசிகலாவை என்றுமே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தீபாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகுவதை அ.தி.மு.க.வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் இதுபோன்ற பதிவுகளை வாட்ஸ்அப்பில் பதிவு செய்கின்றனர்" என்றனர்.
சசிகலாவுக்கு எதிராக தீபாவின் ஆதரவாளரான ராமசாமி என்பவர் பெயரில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமசாமி பிரசுரித்த நோட்டீஸில், 'சிங்கம் இருந்த இடத்தில் ஒரு நரி இருக்கலாமா? குயில் வாழ்ந்த நந்தவனத்தில்…' என்று சசிகலாவை கடுமையாக விமர்சித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தீபா தலைமையில் தலைமையேற்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார் ராமசாமி.
இந்த யுத்தம் சசிகலா, தீபா ஆதரவாளர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
– எஸ்.மகேஷ்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.