ஆதார் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Uncategorized February 4, 2017,
நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் ஆதார் உதவி அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 339 இடங்களில் 367 முகப்புகளுடன் (Counters) நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்களில் ஆதார் சேர்க்கைக்குத் தேவையான படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டு பொதுமக்களின் கருவிழி மற்றும் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு ஆதார் சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை நிர்வகித்து வருகின்றது. சமீபகாலமாக, சென்னைப் பெருநகரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், ஆதார் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கும் பிரத்தியேகமாக அலுவலர்கள் இல்லை போன்ற புகார்கள் தெரிவிக்கப்படுவதால், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாட்டு வழிமுறைகள் 13.2.2017 முதல் கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்படவுள்ளது.
தலைமைச் செயலகம், எழிலகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் (ரிப்பன் மாளிகை), பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களான திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டல அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களான அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மைலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, திருவொற்றியூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படும்.
நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் காலை 9.45 முதல் மாலை 5.45 வரை செயல்படும். இந்த நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் "ஆதார் உதவி மேஜைகள்" அமைக்கப்பட்டு "ஆதார் உதவி அலுவலர்கள்" நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஆதார் சேர்க்கைக்குத் தேவையான படிவங்களைப் பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்குவார்கள். மேலும், "முதலில் வருபவருக்கு முதல் சேவை" என்ற அடிப்படையில் வரிசை எண் பொறிக்கப்பட்ட டோக்கன்களை வழங்குவார்கள். பொதுமக்கள் டோக்கனில் உள்ள வரிசை எண்ணுக்கு ஏற்றவாறு வரிசையில் நின்று சேவைகளைப் பெற வேண்டும். மேலும், இந்த ஆதார் உதவி அலுவலர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தி டோக்கன் எண்ணுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் வரிசையில் செல்வதை உறுதி செய்வார்கள். இதுமட்டுமன்றி ஆதார் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து உதவுவார்கள்.
ஆதார் பதிவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணமில்லா சேவையாகும். நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் ஆதார் உதவி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும், ஆதார் உதவி அலுவலர்களது பணிகளில் குறை ஏதும் இருப்பின் அதனை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 -ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே, 13.2.2017 முதல் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்த புதிய வழிமுறைகளை சிரமமின்றி செயல்படுத்தத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.