பேரவைத்தலைவர் ‘ஒன் சைடு அம்பயர்’ போல செயல்படுகிறார் – ஸ்டாலின்
Uncategorized February 3, 2017,'ஜனநாயக கேலிக்கூத்துகளுக்கு எதிரான சீர்திருத்தப்பணி செய்ய சட்டப்பேரவை இடம் தராவிட்டால், மக்கள் மன்றத்தில் திமுக செயல்படுத்தும். சட்டமன்றம் ஆளுங்கட்சியின் துதிபாடும் இடமாக மாறிவிட்டது.' என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

"அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேரவையில் செயல்பட்ட விதம், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலேயே அமைந்தது. இவற்றைக் கவனித்து ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பிலே இருக்கக் கூடிய பேரவைத்தலைவர் அவர்கள் ‘ஒன் சைடு அம்பயர்’ போல செயல்படுகிறார். பேரவையின் முன்னவரான மாண்புமிகு முதல்வர் அவர்களும் இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காத வகையில் ஏதோ ஒரு நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறார்.
மக்கள் நலன் காக்கும் சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் ஜனநாயகம் படாதபாடு படுகிறது. “சின்னம்மா, சின்னம்மா” என்று அவையில் இல்லாத உறுப்பினரை புகழவும், தலைவர் கலைஞர் அவர்களை விமர்சிக்கவும், ஆக்கபூர்வமாக செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது புழுதி வாரி தூற்றவும் சட்டமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் பயன்படுத்துகிறார்கள். அதை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய பேரவைத் தலைவரும் மனமுவந்து அனுமதிக்கிறார். " என தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.