"பின்லேடனுக்கும் மெரினாவுக்கும் சம்மந்தமில்லை!" ஸ்கூட்டியை ஓட்டிவந்த இளைஞர்களின் நேர்காணல்

"பின்லேடனுக்கும் மெரினாவுக்கும் சம்மந்தமில்லை!" ஸ்கூட்டியை ஓட்டிவந்த இளைஞர்களின் நேர்காணல்

Uncategorized

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் காவலர்கள் தடியடி என்ற பெயரில் கலவரம் செய்தனர். அரசியல்வாதிகளும், காவலர்களும் அதன் பழியை இளைஞர்கள் மீது சுமத்திவிட்டனர். சமீபத்தில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததன் விளைவே இந்த கலவரத்துக்கு காரணம். இதற்கு ஆதாரமாக பின்லேடன் படம் பதித்த பைக்கில் சிலர் சென்றனர் என்று ஆதாரத்தை வெளியிட்டார். அதற்கு அடுத்தபடியாக கூடுதல் கமிஷனர்களான சேஷசாயி மற்றும் சங்கர் அந்த பைக்கை ஓட்டி வந்த இரண்டு இளைஞர்களின் புகைப்படங்களையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காண்பித்தனர். இது குறித்து தடா ரஹீமிடம் பேசினோம்.  

"அந்த இரண்டு இளைஞர்களும் ஒசாமா பின்லேடன் படம் பதித்த பைக்கை ஓட்டி வந்தது உண்மை. ஆனால் அந்தச் சம்பவம் மெரினா போராட்டத்தில் நடக்கவில்லை. மெரினா போராட்டத்துக்கும், இப்போது அரசு தரப்பு ஆதாரமாக காண்பிக்கப்படும் புகைப்படத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. முஸ்லீம் இன மக்களின் வளர்ச்சிக்காக இயங்கி வந்த 'முஸ்லீம் ரிசர்ச் ஃபவுண்டேஷனை' மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்தது. அந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று 'இந்திய தேசிய லீக் கட்சி'யின் சார்பில் கடந்த 2-12-16 அன்று பி.ஜே.பி அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அப்போதுதான் எங்கள் கட்சியை சேர்ந்த தம்பிகள் இருவர் அந்த பைக்கை ஓட்டி வந்தனர். இதைப் பார்த்தவுடன் அவர்களைத் திட்டி அந்தப் படத்தை கிழிக்கச் சொல்லிவிட்டேன். அவர்களும் கிழித்துவிட்டார்கள். இதை அப்போதே நான் காவலர்களிடமும் தெரிவித்து விட்டேன். ஆனால் அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள். முதல்வரோ, காவல் துறை  நடத்திய விசாரணையில் கிடைத்த புகைப்படம் என்கிறார். ஒரு விசாரணையும் நடத்தாமல் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தை பதிந்திருந்தார். இதைத்தான் காவல்துறை எடுத்துக்கொண்டு தீவிர விசாரணை செய்தோம் என்கிறது. இப்போது அந்த இளைஞர்களின் மீது வேறு விதமான கருத்துகளைத் திணித்து வருகிறது காவல்துறை. அதுமட்டுமில்லாமல் சிறுபான்மை மக்களான முஸ்லீம் மக்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என அதிகாரத்தில் இருக்கும் சிலர் நினைத்து வருகிறார்கள்" என்றார். 

பைக்கில் பின்லேடன் படம் பதித்து வந்த மாபு பாஷா, சலாவுதீன், இருவரிடமும் பேசிய போது, "சத்தியமாக அந்த பைக்கை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கொண்டு வரவில்லை. பி.ஜே.பி அலுவலக முற்றுகையின் போதுதான் கொண்டுவந்தோம். அப்போது அங்கு வந்த ரஹீம் அண்ணன் 'என்ன காரியம்டா பண்ணி இருக்கீங்க. முதல்ல அந்தப் படத்தை வண்டியில இருந்து கிழிச்சிப் போடுங்கனு சொல்லி எங்களைத் திட்டினாங்க. உடனே நாங்க 'ஏதோ ஒரு கோவத்துல தெரியாம பண்ணிட்டோம்'னு சொல்லி அப்பவே கிழித்துப் போட்டு விட்டோம். 'இனிமேல் இதுபோல எப்பவும் செய்யக்கூடாது'னு அண்ணன் சொன்னாங்க. நாங்க சரின்னு சொல்லிட்டு வந்துட்டோம். ஆனா இப்போ போலீஸ்காரங்க இந்தப் புகைபடத்த மெரினாவுல எடுத்ததுன்னு சொல்லி மிரட்டி வராங்க" என்றனர்.

பின்லேடன் பதித்த பைக்கை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாங்கள் கொண்டுவரவில்லை பி.ஜே.பி அலுவலக முற்றுகை போராட்டத்தின் போதுதான் கொண்டு வந்தோம் என அந்த இளைஞர்கள் சொல்கின்றனர். ஆனால் காவல்துறையோ இந்தப் புகைப்படம் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான் எடுக்கப்பட்டது என்கிறார்கள். அப்படியானால் அதை நேர்மையான முறையில் காவல்துறையால் நிரூபிக்கமுடியுமா? என்கின்றனர் பொதுமக்கள். 

ஜெ.அன்பரசன், படங்கள்:தே.அசோக்குமார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top