உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு : தோல்வி பயணமா… தேர்வு கரிசனமா? – தயங்கும் அ.தி.மு.க பின்னணி
Uncategorized February 3, 2017,
சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று அனைத்துக் கட்சிகளையும் தெறிக்க விட்டவர் ஜெயலலிதா! ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக்கூட புதுசு புதுசாகக் காரணம் சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது தற்போதைய அ.தி.மு.க அரசு!
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது, ‘அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்புக்கான எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல், ஞாயிற்றுக் கிழமையான செப்டம்பர் 25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு அனைத்துக் கட்சிகளையும் அதிர்ச்சி அடையச் செய்தனர். ‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் இந்த வாய்ப்பை, வாக்காக மாற்றிவிடலாம்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இப்படியொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது அ.தி.மு.க!
ஆளும் கட்சியின் இந்த அதீத வேகத்தைப் பார்த்து அதிர்ந்த தி.மு.க, “ஒருசார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கான வழிமுறைகள் மற்றும் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.” என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்றப் படியேறியது. விளைவு…. உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைபோட்டதோடு, குறைகளை நிவர்த்தி செய்து, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், அரசுத் தரப்பு அதை ஏற்கவில்லை. கடந்த 27-ம் தேதி நடந்த விசாரணையில், ஜனவரி 31-ம் தேதிக்குள் பதில் சொல்ல வேண்டும் என்று மீண்டும் ஆணையிட்டது நீதிமன்றம். ஆனால், 30-ம் தேதியே, தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து சட்டம் போட்டுவிட்டது தமிழக அரசு.

‘2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் வரையிலும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறையின் தேர்வு வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே அவர்களை உள்ளாட்சித் தேர்தல் பணிக்குப் பயன்படுத்த முடியாது. பள்ளி வகுப்புகள்தான் தேர்தல் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்பதால், அதன் பின்னரே வகுப்பறைகள் கிடைக்கும்’ என்றெல்லாம் காரணம் சொல்லி இருக்கிறது தமிழக அரசு.
சட்டசபையில், இந்த சட்டத் திருத்த மசோதாவை தி.மு.க எதிர்த்தது. தி.மு.க கொறடா சக்கரபாணி, “ஆசிரியர்களை தவிர லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து விடுமுறை நாட்களில் தேர்தலை நடத்தலாம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தினால்தான் மத்திய அரசின் நிதியைப் பெற முடியும். ஓரிரு மாதங்களில் தேர்தலை அரசு நடத்த வேண்டும்” என்றார். உள்ளாட்சி அமைச்சரோ, “நடந்து முடிந்து இருக்கவேண்டிய தேர்தலை நடத்தவிடாமல் தடுத்ததே நீங்கள்தான். இப்போது தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை.” என்று சொல்லி முடித்தார்.
அ.தி.மு.க-வுக்கு இப்போது மிகப்பெரிய தலைவலியாக இருப்பதே தீபாதான்.! கட்சியின் மேல்மட்டத் தொண்டர்கள் சசிகலாவை ஏற்றுக்கொண்டாலும், அடிமட்டத் தொண்டர்களிடம் சசிகலாவுக்கு எதிரான மனநிலையே இருக்கிறது. சசிகலாவுக்கு எதிராக மாவட்டந்தோறும் கணிசமான அளவில் அ.தி.மு.க வினர் அணிதிரண்டு இருப்பதை உளவுத்துறையும் கார்டனில் சொல்லிவிட்டது. எனவே இப்போது தேர்தலை நடத்தினால், நமக்கு எதிராக இவர்கள் களம் இறங்கிவிட்டால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சசிகலா தரப்பில் உள்ளதால்தான் ‘இப்போது ஏதாவது காரணத்தைச் சொல்லி தேர்தலை தள்ளிப்போடுங்கள்’ என்று உத்தரவு போனதாம்.

ஜல்லிக்கட்டுப் பிரச்னையில், தமிழகம் முழுவதும் எழுந்த மாணவர்களின் எழுச்சியைப் பார்த்து ஆளும் தரப்பு கொஞ்சம் ஆடிபோய் உள்ளது. இந்த எழுச்சி நாளை தேர்தலில் எதிரொலித்தால் ஆளுங்கட்சி பிரசாரம் செய்யமுடியாத அளவுக்கு அமளி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் உள்ளது. அதனால் ஆறப்போட்டு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற கணக்கிலும் உள்ளார்கள். சசிகலாவின் இலக்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்பதுதான். ‘நாம் முதல்வராகி நம் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் நமது முக்கியத்துவம் அதிகரிக்கும்’ என்று சசிகலாவுக்கு ஆலோசனை சொல்கிறார்கள் அவரது உறவுகள். ஏற்கெனவே, முதல்வராக ஓ.பி.எஸ் கை ஓங்கி வரும் நிலையில், அவர் தலைமையிலேயே தேர்தலை சந்தித்தால் நாம் செல்லாக் காசாகிவிடுவோம் என்ற விவரங்களை சசிகலாவிடம் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். ‘ஆறு மாதத்துக்குள் அரியணையில் அமரவேண்டும்; தேர்தல் லகானை நாம் கட்டுப்படுத்தவேண்டும்’ என்ற திட்டம்தான் அ.தி.மு.க தலைமையின் இப்போதைய எண்ணம்!
எது எப்படியோ…. தேர்வைக் காட்டித் தேர்தலை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.!
– எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.