‘கருணாநிதி, ஜெயலலிதாவோடு போகட்டும்!’  -‘ஓ.பி.எஸ் ஆதரவு’ பற்றி மனம் திறந்த ஸ்டாலின் #VikatanExclusive

Uncategorized

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான தி.மு.கவும் நடந்து கொள்ளும் விதத்தை அரசியல் விமர்சகர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். ‘ இதுநாள் வரையில் தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் நடத்தி வந்த அரசியல் என்பது அப்பாவுடனும் ஜெயலலிதாவுடனும் போகட்டும். நாம் அந்த அரசியலைக் கையில் எடுக்க வேண்டியதில்லை’ என மனம் திறந்து பேசியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 23-ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.கவும் தி.மு.கவும் கடுமையாக மோதிக் கொள்வதைத்தான் மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக, தனிமனித தாக்குதல்கள், தலைவர் மீதான விமர்சனங்கள், சண்டைகள் என எதற்கும் இடமில்லாத வகையில் சபை நடந்து வருகிறது. ஸ்டாலின் செயல்பாட்டை பேரவைத் தலைவர் பாராட்டுவதும் நடக்கிறது. சபைக்குள் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் இருந்தாலே, சண்டையில்தான் முடியும். கடந்த 27-ம் தேதி அன்பழகனின் பேச்சைப் பாராட்டினார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். ” கடந்த இரண்டு நாட்களாக, பேரவையில் அமைச்சர்களோடு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மோதினாலும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது, நாகரிகமான அவையைக் காண முடிகிறது” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ” வடநாட்டு அரசியலைப் போலவே, தமிழக அரசியலிலும் வெறுப்பு அரசியல் மறைந்து வருவது என்பது வரவேற்கத்தகுந்தது. ஆனால், இவ்வாறு நடந்து கொள்வது என்பது அரசியல் அறுவடையை சிறப்பாக நடத்தி முடிக்கத்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதாவுக்குப் பிறகு, அ.தி.மு.கவில் நடந்த மாற்றங்களும் அரசு அதிகாரத்தில் மத்திய அரசின் ஆதிக்கத்தையும் தி.மு.க  உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சசிகலா தரப்பினர் கொடுக்கும் அழுத்தங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ‘ சசிகலாவைவிட பன்னீர்செல்வம் எவ்வளவோ மேல்’ என்ற அடிப்படையில்தான், அவருக்கு தி.மு.க ஆதரவு கொடுத்து வருகிறது. ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தி.மு.கவிடம் ஓரளவு நெருக்கத்தைக் காண்பிக்கிறார் ஓ.பி.எஸ். ‘ சபையில் பன்னீர்செல்வம் பலம் பெறுவதற்கு ஸ்டாலின்தான் பிரதான காரணம்’ என எண்ணிக் கொண்டு, ‘ ஜல்லிக்கட்டு கலவரத்தைத் தூண்டிவிட்டதே தி.மு.கதான்’ எனப் பேட்டி அளித்தார் ம.நடராசன். அவருக்கு இளம் எம்.எல்.ஏ ராஜா மூலமே பதிலடி கொடுக்க வைத்தார் ஸ்டாலின். ‘ உங்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் நான் இல்லை’ என்பதைக் குறிப்பால் உணர்த்திய அறிக்கை அது” என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர்,

” கார்டனின் அரசியல் நடவடிக்கைகளை கவனித்த ஸ்டாலின், தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிலரிடம் விரிவாகப் பேசியிருக்கிறார். அவர்களிடம் பேசும்போது, ‘ சசிகலாவிடம் அரசியல் செய்வதைவிடவும் பன்னீர்செல்வத்திடம் அரசியல் செய்வது எளிதானது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு, ‘பதவிக்காக அலைகிறோம்’ என மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் உருவாக நாம் காரணமாகிவிடக் கூடாது. முதலமைச்சருக்கு ஒரு பிரச்னை வரும்போது அவரைக் காப்பாற்றுவதில் தவறில்லை. அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் நீங்கள் நெருங்கியே பழகுங்கள். அண்ணா தி.மு.க இன்றைக்கு பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. ஜெயலலிதா இருக்கும்வரையில் மத்திய அரசு தன்னுடைய வேலையைக் காட்டவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தைக் காட்டுகிறது. ஜெயலலிதாவின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவிடம் போய்விட்டது. அவருடைய முதலமைச்சர் பதவி பன்னீர்செல்வத்திடம் சென்றுவிட்டது. அரசியலில் விசுவாசமாக இருந்தால் பதவி உயர்வு நிச்சயம் என்பதற்கு பன்னீர்செல்வம் மிகப் பெரிய உதாரணம். தீபா பின்னால் தொண்டர்கள் கணிசமாக செல்கின்றனர். சமூக அரசியல் காரணங்களால் சசிகலாவுக்கு எதிரானவர்கள் தீபாவை ஆதரிக்கின்றனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி நாம் அரசியல் செய்ய வேண்டும். தி.மு.க, அண்ணா தி.மு.க அரசியல் என்பது அப்பாவுடனும் ஜெயலலிதாவுடனும் போய்விட்டது. இப்போது அந்த அரசியல் நமக்குத் தேவையில்லை. தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, பன்னீர்செல்வம், மத்திய அரசு உள்பட சில சக்திகள் இருக்கின்றன. இதில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத இடத்தில் சசிகலா இருக்கிறார். மற்றவர்கள் எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாம் காய் நகர்த்த வேண்டும். பழைய பாணி அரசியல் தேவையில்லை. அரசியலின் முழுப் பரிமாணமும் மாறிவிட்டது. பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறிக்க சசிகலா தரப்பு தயாராக இருக்கிறது. அதற்கு எதிராக நாம் இருக்கிறோம் என்பதால்தான் நம்மீது பாய்கிறார்கள். அரசியல் களத்தில் நமக்கு யார் போட்டி என்பது ஒரு தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும். அதுவரையில் அரசியலை கவனிப்போம். நாளை சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே நம் பின்னால் வந்தாலும் ஆச்சரியமில்லை. அ.தி.மு.கவுடன் விரோத அரசியலோ எதிர்ப்பு அரசியலோ தேவையில்லை’ என விரிவாகப் பேசியிருக்கிறார். இதையொட்டித்தான் தி.மு.கவின் சட்டசபை நடவடிக்கைகளும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன” என்றார் விரிவாக.

அரசியல் அதிகாரத்தைத் தொடர்ந்து பெறுவதற்காக, வெறுப்பு அரசியல் புண்ணை ஆறவிடாமல் பார்த்துக் கொண்ட தலைமைகளுக்கு எதிராக ஸ்டாலின் வகுத்துள்ள அரசியலை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். இது வீக்கமா? வளர்ச்சியா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

-ஆ.விஜயானந்த்

Source: ‘கருணாநிதி, ஜெயலலிதாவோடு போகட்டும்!’  -‘ஓ.பி.எஸ் ஆதரவு’ பற்றி மனம் திறந்த ஸ்டாலின் #VikatanExclusive – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top