'காஷ்மீர் பனிச்சரிவுக்கு பாக்., குண்டு வீச்சு காரணம்
avalanche, India, india army, New delhi, soldiers January 30, 2017,
புதுடில்லி: ”உலகளாவிய வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்றங்கள், பாக்., ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசுவது உள்ளிட்ட காரணங்களால், ஜம்மு – காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது,” என, ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி, 15க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்கு அவ்வப்போது பனிச்சரிவு ஏற்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது.
அடிக்கடி தாக்குதல்:
இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரில், இதற்கு முன் பனிச்சரிவுகள் ஏற்பட்டதில்லை. ஆனால், சமீபகாலமாக, பாக்., ராணுவம், கனரக பீரங்கிகள், துப்பாக்கிகளால் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மண் உறுதித் தன்மையை இழந்து, பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. பனிச்சரிவுகள் ஏற்பட, உலகளாவிய வெப்ப மயமாதலும், சுற்றுப்புறவியல் மாற்றமும் பிற காரணங்கள்.
வீரர்கள் வாபஸ்:
ஜம்மு – காஷ்மீரில், கடந்த, 72 மணி நேரத்தில், பலமுறை பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த மூன்று நாட்களுக்கு இதே போன்ற சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து, வீரர்களை வாபஸ் பெற்றுள்ளோம். இருப்பினும், சில பகுதிகள் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடக்க அதிகம் வாய்ப்பு உள்ளவை. எனவே, அங்கு, வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னுரிமை:
பனிச்சரிவில் சிக்கி இறந்த வீரர்களின் உடல்களை மீட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னுரிமை தந்து பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Source: 'காஷ்மீர் பனிச்சரிவுக்கு பாக்., குண்டு வீச்சு காரணம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.